அதிகாரப் நாற்காலியில் அமர ஆசையா? மயிலாடுதுறையில் குரூப் 1 தேர்வுக்கு 'ஃப்ரீ கோச்சிங்'!
மயிலாடுதுறையில் தொடங்க உள்ள TNPSC குரூப்-1 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி கொள்ள இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் மே 20-ஆம் தேதி முதல் மயிலாடுதுறையில் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் மற்றும் இறுதியாண்டு பட்டதாரி மாணவ-மாணவிகள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு உயர் பதவிகளைப் பெற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசின் தொடர் முன்னெடுப்புகள்
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களின் ஒரு அங்கமாக இயங்கி வரும் 'தன்னார்வ பயிலும் வட்டங்கள்' (Voluntary Study Circles) மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த கிராமப்புற, நகர்ப்புற இளைஞர்களின் அரசுப் பணி கனவு நனவாக்கப்பட்டு வருகிறது.
இங்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (SSC) போன்ற பல்வேறு அரசுத் தேர்வு முகமைகளால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசப் பயிற்சி வகுப்புகள், தரமான பாடக்குறிப்புகள், வாராந்திர மாதிரித் தேர்வுகள், மாதிரி நேர்முகத் தேர்வுகள் (Mock Interviews) மற்றும் சீருடைப் பணியிடங்களுக்கான இலவச உடல் தகுதித் தேர்வுப் பயிற்சிகள் (Physical Training) ஆகியவை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
காத்திருக்கும் உயர் பதவிகள்
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள புதிய ஆண்டுத் திட்ட நிரலின்படி (Annual Planner), எதிர்வரும் ஜூன் மாதத்தில் தமிழக அரசின் மிக உயரிய பதவிகளை உள்ளடக்கிய 'தொகுதி-ஐ' (Group-1) தேர்விற்கான அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பு வெளியாக உள்ளது.
இத்தேர்வின் மூலம் தமிழக அரசின் மிக முக்கியப் பிரிவுகளான.
* துணை ஆட்சியர் (Deputy Collector)
*துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP)
* உதவி ஆணையர் (வணிக வரிகள்)
* உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித் துறை)
* மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer)
* உதவி ஆணையர் (தொழிலாளர் துறை)
போன்ற உயரிய அதிகாரமிக்க பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாவட்ட அளவில் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் இத்தகைய மதிப்புமிக்க பதவிகளில் அமர்வதற்கு மாவட்ட இளைஞர்களுக்கு இதுவொரு அரிய வாய்ப்பாகும்.
வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதிகள்
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
பொதுப் பிரிவினர் (OC) குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 34-க்குள் இருக்க வேண்டும்.
இதர பிரிவினர் (BC, BCM, MBC/DNC, SC, SCA, ST): அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டு, 39 வயது வரை உள்ள அனைவரும் இத்தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள் ஆவர்.
இறுதியாண்டு மாணவர்களுக்கும் அதிரடி வாய்ப்பு
பொதுவாகப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை உள்ள சூழலில், தற்போது 2025-2026ஆம் கல்வியாண்டில் இளங்கலைத் துறைகளில் (UG) இறுதியாண்டு பயின்று வரும் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு ஆண்டிலேயே கல்லூரிப் படிப்பை முடிக்கும் இளைஞர்கள் உடனடியாக அரசு அதிகாரியாக மாறுவதற்கான பொன்னான வாய்ப்பு உருவாகியுள்ளது.
மூன்று அடுக்குத் தேர்வு முறை
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வானது மிகவும் சவாலான, அதே சமயம் முறையான உழைப்பால் வெல்லக்கூடிய மூன்று நிலைகளைக் கொண்டதாகும்,
1. முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam): கொள்குறி வகை (Objective Type) வினாக்களைக் கொண்டது.
2. முதன்மைத் தேர்வு (Main Written Exam): விரிவாக விடையளிக்கும் தாள்களைக் கொண்டது.
3.நேர்முகத் தேர்வு (Oral Test / Interview): இறுதி ஆளுமைத் திறன் மதிப்பீட்டு நிலை.
மயிலாடுதுறையில் மே 20 முதல் கட்டணமில்லா நேரடிப் பயிற்சி
இத்தேர்வின் முதல் படியான முதல்நிலைத் தேர்வினை (TNPSC Group-I Prelims) மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் எளிதாகக் கடக்கும் பொருட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் பிரத்யேகக் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இப்பயிற்சி வகுப்புகள் வரும் 20.05.2026 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு முறைப்படி தொடங்கப்பட உள்ளது. இப்போட்டித் தேர்வுகளுக்கெனத் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பயிற்றுநர் குழுவால் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, பல ஆண்டுகள் போட்டித் தேர்வுத் துறையில் அனுபவமிக்க சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
வெறும் வகுப்புகள் மட்டுமின்றி, மாணவர்களின் தயாரிப்பு நிலையைத் துல்லியமாக மதிப்பிடும் நோக்கில் வாராந்திர மாதிரித் தேர்வுகள், பாட வாரியான தீவிரத் திருப்புதல் தேர்வுகள் மற்றும் மாநில அளவிலான தரவரிசையுடன் கூடிய மாதிரித் தேர்வுகள் (State-level Mock Tests) எனத் தொடர்ச்சியான தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இது மாணவர்கள் தங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து, தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளப் பேருதவியாக இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தொடர்புக்கு
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த, குரூப்-1 தேர்வில் பங்கேற்க விருப்பமும் ஆர்வமும் உள்ள தகுதியான மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம்.
நேரடி முகவரி: 2வது தெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயிலாடுதுறை – 609001. என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்திற்குத் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரடியாக வருகை தந்து தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் வழித் தொடர்பு: நேரில் வர இயலாதவர்கள் அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் 9499055904 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டு இணைந்து கொள்ளலாம்.
மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினைத் தவறவிடாமல், அதிக அளவில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று, தேர்வுகளில் நூறு விழுக்காடு வெற்றி பெற்று, அரசுப் பணிகளில் அமர்ந்து மாவட்டத்திற்கும் தங்களது குடும்பத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















