சின்ன பந்தல்... செல்ல விநாயகர்... பிரம்மாண்ட சிலைகளை ஓரங்கட்டிய குட்டிஸ் விநாயகர்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை ஓரங்கட்ட வைக்கும் விதமாக குட்டிஸ்கள் தங்கள் கையால் செய்த விநாயகர் சிலை வழிபாடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மயிலாடுதுறை: நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், வண்ணமயமான பிரம்மாண்ட சிலைகளுக்கு மத்தியில் மயிலாடுதுறை அருகே சிறுவர்கள் தங்கள் பிஞ்சு கரங்களால் களிமண்ணை பிசைந்து செய்த விநாயகர் சிலைகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பிரம்மாண்டமான வடிவங்களை விடவும், சிறார்கள் களிமண்ணில் வடித்த விநாயகருக்கு தனி மவுசும் ஆன்மீக ஈர்ப்பும் இருப்பது விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பம்சமாக மாறியுள்ளது.
மாவட்டமெங்கும் 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விழாக்குழுவினராலும் பொதுமக்களாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை நகரில் உள்ள முக்கிய ஆலயங்கள் மற்றும் சந்திப்புகளில் சிங்கமுக விநாயகர், ஐந்து தலை நாக விநாயகர், கற்பக விநாயகர், கஜமுக விநாயகர் எனப் பல்வேறு அழகிய வடிவங்களில் சுமார் 10 அடி உயரத்திற்கும் மேலான பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் உரிய அனுமதியுடன் மாவட்டம் முழுவதும் சுமார் 600 விநாயகர் சிலைகள் வரை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு படையல்களுடன் பொதுமக்கள் பக்திச் பரவசத்துடன் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
விவசாயம் செழிக்க மழை வேண்டி சிறார்களின் களிமண் விநாயகர்
பெரியவர்கள் அமைத்துள்ள பிரம்மாண்ட பந்தல்களுக்கு இடையே, மயிலாடுதுறை அருகே உள்ள பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் காட்டிய ஆன்மீக ஆர்வமும் சமூக அக்கறையும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தாங்களாகவே களிமண்ணை எடுத்து வந்து தங்கள் பிஞ்சு விரல்களால் விநாயகர் சிலையை அழகாக வடித்தெடுத்துள்ளனர். பின்னர் தாங்களே சிறிய பந்தல் அமைத்து, அந்த களிமண் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, மலர்களாலும் படையல்களாலும் அலங்கரித்து உற்சாகத்துடன் வழிபாடு நடத்தினர்.
மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழிக்க முடியும், விவசாயம் செழித்தால் மட்டுமே அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்பதை உணர்ந்த அந்தச் சிறுவர்கள், தங்களுக்குச் சாப்பாடு அளிக்கும் விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். சிறுவர்களின் இந்த நெகிழ்ச்சியான வழிபாட்டை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட, அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களின் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
கடற்கரையில் கரைக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
விநாயகர் சதுர்த்தி வழிபாடுகள் நிறைவுற்றதும், பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. அந்த வகையில் சங்கரன்பந்தல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அனைத்து விநாயகர் சிலைகளும் தரங்கம்பாடி கடற்கரைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.
அதேபோல் மயிலாடுதுறை கோட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் வரும் 15-ஆம் தேதி ஊர்வலமாகப் புறப்பட்டு நீர்நிலைகள் மற்றும் பூம்புகார் கடலில் கரைக்கப்பட இருக்கின்றன. சீர்காழியில் உப்பனாற்றிலும் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் விசர்ஜன நிகழ்வுகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























