மயிலாடுதுறையில் வியக்கவைக்கும் வரலாற்று அதிசயம்: விண்கலத் தொழில்நுட்பமா? 2600 டிகிரி வெப்பத்தைத் தாங்கும் 17-ஆம் நூற்றாண்டு குர்ஆன் பெட்டி..!
மயிலாடுதுறையில் 7 தலைமுறைகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் 17-ஆம் நூற்றாண்டு நுண் திருக்குர்ஆன் மற்றும் அதன் அதிசய உலோகப் பெட்டி குறித்து மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் 7 தலைமுறைகளாக ஒரு குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகச்சிறிய அளவிலான திருக்குர்ஆன் மற்றும் அதன் உலோகப் பெட்டி குறித்த வியக்கத்தக்க ஆய்வறிக்கைகள் தற்போது வெளியாகியுள்ளன. விண்கலத் தொழில்நுட்பத்திற்கு இணையான உலோகக் கலவையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுப் பொக்கிஷம், நவீன அறிவியல் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பின்னணி வரலாறு
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமீனுல்லா (65). இவர்களது குடும்பத்தினர் கடந்த ஏழு தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வருகின்றனர். இவரது முன்னோர்கள் வழிவழியாக ஒரு சிறிய மெட்டல் பெட்டியைப் பாதுகாத்து வந்துள்ளனர். அந்தப் பெட்டிக்குள் மிகவும் பழமையான, உலகிலேயே அரிதானதாகக் கருதப்படக்கூடிய சிறிய அளவிலான திருக்குர்ஆன் இருப்பதை அறிந்து, அதன் தொன்மை குறித்து அறிய அமீனுல்லா குடும்பத்தினர் ஆர்வம் காட்டினர். இதனை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை (ASI), இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதற்கான சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த வரலாற்றுப் பொக்கிஷத்தின் அறிவியல் நுட்பங்களை ஆராய மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியர் ராமலிங்கம் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் களமிறங்கினர்.
அளவும் அமைப்பும்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இந்த திருக்குர்ஆன் புத்தகம், வழக்கமான அளவில் இல்லாமல் வெறும் 2.5 இன்ச் அகலமும், 1.75 இன்ச் நீளமும் கொண்ட மிகச்சிறிய வடிவில் உள்ளது. இதில் வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், 19 பக்கங்களில் மொத்தம் 6,666 திருக்குர்ஆன் அத்தியாயங்கள் அரபி மொழியில் நுண் பிணைப்பு எழுத்து முறையில் (Micro-writing) எழுதப்பட்டுள்ளன. காகிதத்தின் தன்மையை ஆய்வு செய்ததில், அது கார்பன் சுழற்சி முறை அளவீட்டின்படி மிக நீண்ட காலத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாதாரணமாக மனிதக் கண்களால் எழுத முடியாத இவ்வளவு சிறிய எழுத்துக்கள் எவ்வாறு அன்றைய காலத்திலேயே சாத்தியமானது என்பது ஆய்வாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2,600 டிகிரி வெப்பத்தைத் தாங்கும் உலோகப் பெட்டி
இந்தத் திருக்குர்ஆனை விட, அதனைப் பாதுகாத்து வரும் உலோகப் பெட்டி (Metal Box) அறிவியலாளர்களை மிரள வைத்துள்ளது. காரைக்குடி சிக்ரி (CECRI), பெங்களூரு ஐஐஎஸ்சி (IISc), ஐஐடி (IIT) மற்றும் என்ஐடி (NIT) உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த ஆய்வகங்களில் இந்தப் பெட்டியின் துகள்கள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில், இந்தப் பெட்டி 78 வகையான உலோகங்களின் கலவையால் உருவாக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 32 உலோகங்கள் குறைந்த விகிதத்திலும், 46 உலோகங்கள் அதிக விகிதத்திலும் கலக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தப் பெட்டியானது 2,600 டிகிரி செல்சியஸ் வரையிலான அதீத வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. சோதனையின் போது 2,500 டிகிரி செல்சியஸைத் தாண்டிய போதும் இந்த உலோகப் பெட்டி உருகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளித் துறைக்கு ஒரு வழிகாட்டி
இது குறித்து பேராசிரியர் ராமலிங்கம் விளக்குகையில், "தற்போது விண்கலங்கள் வளிமண்டலத்தை கடக்கும்போது ஏற்படும் வெப்பத்தைத் தவிர்க்க செராமிக் பூச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் செராமிக் அதிக எடை கொண்டது. நீடூரில் கண்டறியப்பட்டுள்ள இந்த உலோகப் பெட்டியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், மிகக் குறைந்த எடையில் அதிக வெப்பத்தைத் தாங்கும் விண்கலங்களை உருவாக்க முடியும். இது எரிபொருள் தேவையையும் பெருமளவு குறைக்கும்," எனத் தெரிவித்தார்.
துருப்பிடிக்காத மர்மம்
இந்த உலோகப் பெட்டியில் யுரேனியம், குளுக்கோனியம், தோரியம் மற்றும் கோபால்ட் போன்ற கதிர்வீச்சு தனிமங்கள் (Radioactive elements) பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக இத்தகைய தனிமங்கள் கிளர்ச்சியுறும் தன்மை கொண்டவை. ஆனால் இந்தப் பெட்டியில் அவை மிகத் துல்லியமான விகிதத்தில் சமநிலையில் (Equilibrium) கலக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே பல நூற்றாண்டுகள் கடந்தும் இந்தப் பெட்டி ஒரு சிறு துரும்பு கூட பிடிக்காமல், புதியது போலவே காட்சியளிக்கிறது.
நிக்கல் பிளேட்டிங் தொழில்நுட்பம் 17 அல்லது 18-ஆம் நூற்றாண்டுகளில் தான் உலகிற்கு அறிமுகமானது. ஆனால் அதற்கு முன்பே, 14-ஆம் நூற்றாண்டிலேயே இத்தகைய உயரிய தொழில்நுட்பத்துடன் இந்தப் பெட்டி உருவாக்கப்பட்டிருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்கால ஆராய்ச்சி
இந்தப் பெட்டி செய்வதற்கான மண் எங்கிருந்து எடுக்கப்பட்டது? அந்த காலத்தில் உலோகங்களை இவ்வளவு துல்லியமாக உருக்கி இணைக்க என்ன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள்? என்பது குறித்த தேடல் இன்னும் தொடர்கிறது.
மயிலாடுதுறையின் இந்த 'அதிசயக் குர்ஆன்' வெறும் ஆன்மீக அடையாளமாக மட்டுமல்லாமல், தமிழர்களின் அல்லது அன்றைய கால மக்களின் அதீத அறிவியல் மற்றும் உலோகவியல் அறிவுக்கு ஒரு சான்றாக விளங்கி வருகிறது. இந்த ஆய்வு குறித்து வரும் காலங்களில் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் விரிவான தேடல்களை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
























