தமிழின் முதல் நாவலாசிரியருக்குப் பெருமை! மயிலாடுதுறையில் பிரம்மாண்ட அரங்கம் - திறந்து வைத்த தமிழக முதல்வர்!
யிலாடுதுறையில் ரூ.5.15 கோடியில் மணிமண்டபம் மற்றும் சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளங்களாக விளங்கும் தமிழின் முதல் நாவலாசிரியர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை மற்றும் தியாகி சாமிநாகப்பன் படையாட்சி ஆகியோரைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலைகள் மற்றும் அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மொத்தம் ரூ.5 கோடியே 14 இலட்சத்து 76 ஆயிரத்து 250 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகளின் திறப்பு விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் நேரில் கலந்துகொண்டு சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்சீப் வேதநாயகம் பிள்ளை: தமிழின் முதல் நாவலாசிரியருக்குப் பெருமை
மயிலாடுதுறை நகராட்சி, ஆரோக்கியநாதபுரத்தில் ரூ.4 கோடியே 70 இலட்சத்து 36 ஆயிரத்து 250 மதிப்பீட்டில், மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 9511.84 சதுர அடி பரப்பளவில் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதில் 3787.52 சதுர அடியில் பார்வையாளர்கள் அமரும் இடம், 2727.66 சதுர அடியில் உணவுக் கூடம், 1156.70 சதுர அடியில் கூடம் மற்றும் குளிர்சாதன வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாகத்தில் இவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பின்னணி
1826-ல் பிறந்த வேதநாயகம் பிள்ளை, தமிழகத்தின் முதல் இந்திய நீதிபதி என்ற பெருமைக்குரியவர். தரங்கம்பாடி, சீர்காழி, மயிலாடுதுறை நீதிமன்றங்களில் பணியாற்றிய இவர், 1873-ல் மாயூரம் நகராட்சித் தலைவராகவும் சேவையாற்றினார். தமிழின் முதல் புதினமான 'பிரதாப முதலியார் சரித்திரம்' மட்டுமின்றி, 'நீதிநூல்', 'பெண்மதி மாலை' போன்ற சமூக நீதி மற்றும் பெண் கல்விக்கான நூல்களையும் இயற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தியாகி சாமிநாகப்பன் படையாட்சி: மகாத்மா காந்தியுடன் கைகோர்த்த வீரர்
மயிலாடுதுறை நகராட்சி, தரங்கம்பாடி சாலை, நலவாழ்வு மைய வளாகத்தில் ரூ.44.40 லட்சம் மதிப்பீட்டில் சுதந்திரப் போராட்ட தியாகி சாமிநாகப்பன் படையாட்சி திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.
தியாக வரலாறு
மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் 1891-ல் பிறந்த இவர், தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி நடத்திய உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டத்தில் (ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம்) பங்கேற்றார். 1909-ல் கைது செய்யப்பட்டு சிறையில் கடும் சித்ரவதைகளுக்கு உள்ளான இவர், சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் தனது 18-வது வயதிலேயே (ஜூலை 6, 1909) உயிர்த்தியாகம் செய்தார். இவரது தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2025-ம் ஆண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று நிறைவேற்ற நிலையில் இன்று சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "அரசு அறிவித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், தமிழறிஞர்களையும் தியாகிகளையும் கௌரவிக்கும் வகையில் இந்தச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார். இவ்விழாவில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சுதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பூங்கொடி, நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்படப் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.
























