கஞ்சாவை சட்டரீதியாக விற்க அரசு நடவடிக்கை எடுக்குமா ? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
ஒருவேளை இந்தியாவிலேயே மது தடை செய்யப்பட்டாலும் வெளிநாடுகளுக்குச் சென்று மது வாங்கவும் தயாராகவே உள்ளனர்.- நீதிபதிகள் கருத்து
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த கலாவதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கல்லூத்து கிராமத்தில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கல்யாணிபட்டி விலக்கு பகுதியில், டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இங்கு டாஸ்மாக் கடையை திறந்தால் மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாவர். எனவே, கல்லூத்து கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது" என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு, கல்லூத்து கிராம மக்கள் மதுக்கடையை திறக்க விரும்பாத போது அங்கு ஏன் டாஸ்மாக் கடையை திறக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், "அப்பகுதியில் சட்டவிரோதமான மது விற்பனை மற்றும் போலி மதுபான விற்பனை நடைபெறுவதால் அங்கு டாஸ்மாக் கடையை திறக்க முடிவு செய்யப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "அவ்வாறெனில் கஞ்சா உள்ளிட்டவையும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. அதையும் சட்டரீதியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா? என கேள்வி எழுப்பினர்.மனுதாரர் தரப்பில், ஏற்கனவே ஊர் மக்கள் தரப்பிலிருந்து தங்கள் பகுதிக்கு மதுக்கடை வேண்டாம் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் அவ்வாறெனில் அங்கு மதுக்கடை திறக்கப்பட்டாலும் கிராமத்தினர் சுயகட்டுப்பாட்டுடன் செல்லாமல் இருக்க வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டாலும் கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அருகமை மாநிலங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று மது வாங்க குடிமகன்கள் தயாராக உள்ளனர். ஒருவேளை இந்தியாவிலேயே மது தடை செய்யப்பட்டாலும் வெளிநாடுகளுக்குச் சென்று மது வாங்கவும் தயாராகவே உள்ளனர். எல்லா விஷயங்களுக்கும் அரசை மட்டும் குறை கூறக்கூடாது. ஒவ்வொருவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், கல்லூத்து கிராம மக்களின் மனுவை பரிசீலித்து அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடை அமைப்பது குறித்து முடிவு செய்யவும், அதற்கான அறிக்கையை டிசம்பர் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அதுவரை டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.