தேனி தென் காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் மாசி மக திருக்கல்யாணம்: பக்தர்களின் பரவசம்!
திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை திருக்கோவிலில் இந்த வருட மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் தென் காளகஸ்தி என்று அழைக்க கூடிய நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை திருக்கோவிலில் இந்த வருட மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஞானாம்பிகை சமேத திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோவில். இத்திருக்கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. உத்தமபாளையம் நகர சுரபி நதிக்கரையில் வீற்றிருக்கும் தென் காலஹஸ்தி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஞானாம்பிகை திருக்காளாத்தீஸ்வரர் கோவில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலாகும்.
இக்கோவில் ராகு, கேது, கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை திருக்கோவிலானது இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது. இத்திருக்கோவிலானது வருடம் தோறும் மாசி மகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட திருவிழாவிற்காக கடந்த மாதம் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழாவினை தொடங்கினார்கள்.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை அம்மனுக்கு திருக்கல்யாண விழாவினை நடத்தினார்கள். விழாவில் முன்னதாக கோகிலாபுரத்தில் இருந்து சுவாமி அம்மனுக்கு பெண் அழைப்பு நடைபெற்று பெண் வீட்டாரின் சீர்வரிசைகள் உடன் ஞானம்பிகைக்கு பச்சைப்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடத்தி திருமாங்கல்யத்தை அணிவித்தார்கள்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள். சிவனே போற்றி போற்றி என கோஷமிட்டு மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்து புதிய மாங்கல்ய கயிற்றினை அணிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து முன்னோர்கள் நடத்திய திருமண சம்பிரதாய பூஜைகளை செய்து மலர் மாலைகளை மாற்றி சுவாமிக்கும் அம்மனுக்கும் அணிவித்தனர். இந்த விழாவில் உத்தமபாளையம், கோகிலாபுரம், சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் நாளை திருத்தேரோட்ட திருவிழாமிக விமர்சையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.























