தேனி: 15 வருஷமா பூட்டியேதான் கிடந்தது.. மீண்டும் திறக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம்.!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த அறுவை சிகிச்சை அரங்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் 15 வருடங்களுக்குப் பிறகு குடல் இறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தில் அரசு மருத்துவமனை தாலுகா அரசு மருத்துவமனையாக உள்ளது. இங்கு தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். உள்நோயாளிகளாக 72 பேர் வரை தங்கும் வசதி உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையால், 15 வருடங்களாக அறுவை சிகிச்சை இல்லாமல் பூட்டிக்கிடந்த அறுவை சிகிச்சை அரங்கு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு, முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இதில் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் ராமமூர்த்தி , என்பவர் குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தமிழ்நாடு அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதன்படி நேற்று அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கில் தலைமை மருத்துவர் டாக்டர். பாரதி தலைமையில், மயக்கவியல் டாக்டர் மனோஜ், அறுவை சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வைரவன், உள்ளிட்ட குழுவினர், குடல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.
'வெளியூர் போறீங்களா? இதை செய்யுங்க; வீட்டுக்கு நாங்க காவல்' - வேலூர் போலீசாரின் அதிரடி திட்டம்!
இது குறித்து அறுவைச் சிகிச்சை நிபுணர் வைரவன் கூறுகையில், "குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு தேனி மற்றும் மதுரைக்கு இப்பகுதி மக்கள் செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனையில் அதிகமாக பணம் செலவாகும். ஆகையால் இப்பகுதி பொதுமக்கள் அரசு மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், தமிழக அரசு இந்த மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு சிகிச்சைகள் வழங்கிட உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முழு உறுதுணையாக தேனி மாவட்ட கலெக்டர், மாவட்ட சுகாதார துறை மற்றும் மாவட்ட இணை இயக்குனர் அவர்களின் ஆலோசனைப்படி . அறுவை சிகிச்சை அரங்கு திறக்கப்பட்டு, குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. சிறப்பான டாக்டர்கள் குழுவினர் தற்போது உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ளனர். எனவே பொதுமக்கள் இம்மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
ட்ரெண்டிங் செய்திகள்






















