தேனி: தொழில் தொடங்க கடன் பெற்றுத்தருவதாக கூறி பெண்ணிடம் 63 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் மோசடி
தொழில் தொடங்க கடன் பெற்றுத்தருவதாக கூறி பெண்ணிடம் 63 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கீழஓடைத்தெருவை சேர்ந்த நாகராஜ் மனைவி சித்ரா. இவர் தற்போது தேனி அல்லிநகரம் வள்ளிநகரில் வசித்து வருகிறார். இவர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், "நான் சுயதொழில் தொடங்க கடன் பெறுவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு தேனியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்த முத்துராஜா மகன் மருத துரை என்பவர் தன்னை வங்கியின் கடன் பிரிவு மேலாளர் என்றார். அவர் ரூ.23 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு சொத்து ஆவணங்கள் எடுத்து வருமாறும் கூறினார்.
Sri lanka : இலங்கையின் அடுத்த அதிபர் யார்? தமிழ் எம்பிக்களின் ஆதரவு யாருக்கு?
என்னிடம் சொத்து ஆவணங்கள் இல்லாததால், எனது 63 பவுன் நகைகளை அடகு வைத்து முன்பணம் கொடுக்க சென்றேன். அப்போது அவர் தனது பெயரில் வட்டியில்லாமல் அடகு வைப்பதாக கூறி நகையை வாங்கினார். ஆனால் அவர் அந்த நகைகளை சின்னமனூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்தார். பின்னர் அந்த நகை ஏலம் போய்விடும் என்று கூறி நகையை மீட்க ரூ.4 லட்சம் கேட்டார். நானும் நகையை மீட்க வேண்டும் என்பதற்காக ரூ.4 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் அவர் கடன் வாங்கிய பணத்தை தராமலும், நகையை திருப்பித் தராமலும் மோசடி செய்து ஏமாற்றிவிட்டார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவரும், அவருடைய குடும்பத்தினரும் என்னை மிரட்டினர்" என்று கூறியிருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தேனி போலீசாருக்கு, எஸ்பி உத்தரவிட்டார். அதன்பேரில் இதுகுறித்து மருததுரை, அவருடைய மனைவி திவ்யா மற்றும் திவ்யாவின் பெற்றோர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மருத துரை என்பவர் வங்கி கடன் பிரிவு மேலாளர் இல்லை என்றும், அவர் கடன் பெற்றுக் கொடுக்கும் முகவர் போல் செயல்பட்டதாகவும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















