பழனி கோவில் பஞ்சாமிர்த விற்பனை சாதனை: 200 நாட்களில் ரூ.41 கோடி! பக்தர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 200 நாள்களில் ரூ. 41 கோடி பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உலகத் தமிழர்களின் முதற்கடவுள் முருக பெருமான் எனவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது பழனி முருகன் கோவில். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு.
குறிப்பாக பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசித்தி பெற்ற பிரசாதமாக பஞ்சாமிர்தம் விளங்குகிறது. மலைவாழை, கற்கண்டு, நெய், கரும்புசர்க்கரை, தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவைமிகுந்ததாக தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதமானது அதிகளவில் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் 2019 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாமிர்தத்தை கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயில், கிரிவலவீதி, பேருந்துநிலையம் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் இதற்கான தயாரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுகாதார முறையில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு டின், பெட் ஜார்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. 470 கிராம் எடையுள்ள பஞ்சாமிர்தம் டின் ரூ.45, பெட் ஜார் ரூ.40, 200 கிராம் எடையுள்ள பெட் ஜார் ரூ. 20 விலைகளில் விற்கப்படுகிறது.
பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் அதிக அளவில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு கோவில் நிர்வாகம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் வருகையை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாமிர்த விற்பனையை அதிகப்படுத்தியது. இதற்கென 15 நிரந்தர பஞ்சாமிர்த விற்பனை மையங்கள், ஒரு தற்காலிக பஞ்சாமிர்த விற்பனை மையம் அமைக்கப்பட்டது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு பழனி கோவிலில் ஜூலை 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ஆண்டு பசலி என்று கணக்கிடப்படுகிறது. இதன்படி, தற்போது நடைபெறுவது 1435-ஆவது பசலி ஆண்டு ஆகும். இந்த நிலையில், பழனி கோவில் சாா்பில் பஞ்சாமிா்த விற்பனை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் கடந்த 1432 -ஆவது பசலியில் ரூ. 31.17 கோடிக்கும், 1433-ஆவது பசலியில் ரூ. 36.56 கோடிக்கும், 1434-ஆவது பசலியில் ரூ. 36.14 கோடிக்கும் பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 1435-ஆவது பசலியில் கடந்த 200 நாள்களில் ரூ. 41 கோடிக்கு பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்




















