மேலும் அறிய
அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி மீதான விசாரணை ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழங்க உத்தரவு
மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணியின் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கில் உத்தரவு.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி மீதான விசாரணை ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழங்க உயர்கல்வி துறை செயலருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசு வழங்கும் பணம் மோசடி செய்யப்படுகிறது
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ் துறை பேராசிரியர் பிரபாகர் வேதமாணிக்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் இயங்கி வருகிறது. கல்லூரியின் முதல்வராக டாக்டர் தவமணி இருக்கிறார். கல்லூரியின் நிர்வாகம் முழுவதுமாக அரசிடம் இருந்து பெரும் நிதியை கொண்டே இயங்கி வருகிறது. ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர் இல்லாத ஊழியர்கள் நியமனம், ஒப்பந்த அடிப்படையில் கல்லூரி கட்டிடத்தை பராமரிப்பது உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்தப்படும் அரசு நிதி வெளிப்படை தன்மையுடன் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறின்றி அமெரிக்கன் கல்லூரியின் முதல்வரால், அரசு வழங்கும் பணம் மோசடி செய்யப்படுகிறது.
கொடைக்கானலில் ரிசார்ட்டுகள் வாங்கப்பட்டுள்ளன
இது தொடர்பாக ஏற்கனவே தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக உயர்கல்வி துறையின் இயக்குநர் புகாரை உற்று நோக்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. உயர்கல்வி துறையின் இயக்குநர் அமெரிக்கன் கல்லூரியின் முதல்வரால் பராமரிப்பில் உள்ளது. அதன் சொத்துக்கள் தொடர்பான சேவை பதிவேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அது நிதி முறைகேடு மற்றும் நிர்வாக முறைகேட்டிற்கு சான்றாக உள்ளது. அரசிடம் முறையான அனுமதி பெறாமல், விலை உயர்ந்த சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள இரண்டு கார்கள் வாங்கியுள்ளார். கொடைக்கானலில் ரிசார்ட்டுகள் வாங்கப்பட்டுள்ளன. கல்லூரி மேம்பாட்டிற்கான நிதியை முறைகேடாக பயன்படுத்தியதோடு, அல்லாமல் அலுவலகத்தையும் விதிமீறி பயன்படுத்தி வருகிறார். ஆசிரியர் நியமனத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, அரசின் நிதியை முறைகேடாக பயன்படுத்தி சொத்துக்களை சேர்த்துள்ளார். இவை தொடர்பான ஆவணங்களுடன் அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி மீது ஒழுங்கு நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கல்லூரிக்காக அரசு வழங்கிய நிதியை முறைகேடாக பயன்படுத்தி சொத்துக்களை சேர்த்ததாக அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி மீது நடவடிக்கை கோரி அளித்த மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும்
இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "புகார் தொடர்பான கல்லூரியின் முதல்வர் தவமணி ஆவணங்களை விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விசரனை நிலுவையில் இருக்கிறது. கூடுதல் ஆவணங்களை சேகரிப்பதோடு சிலரை விசாரிக்க வேண்டி உள்ளது. விரைவில் விசாரணை முடிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் தவமணி தரப்பில் "என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கிறேன்" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, "தமிழக உயர்கல்வி துறையின் செயலர் மற்றும் இயக்குனர் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மீதான விசாரணை ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழங்க வேண்டும், தமிழக லஞ்ச ஒழிப்பு துறையின் இயக்குனர் மனுதாரரின் புகார் தொடர்பாக எந்த விதமான தாமதமும் இன்றி விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















