ஓபிஎஸ்-ன் அரசியல் பயணம்: ஜெயலலிதா விசுவாசி திமுக பக்கம் சாய்ந்தது ஏன்? அதிர்ச்சி தரும் பின்னணி!
எந்த நிபந்தனையும் இன்றி கட்சியில் சேரத்தயாராய் இருக்கிறேன். என்று அவர் தூது விட்ட பிறகும் கூட ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்க்க சம்மதிக்கவே இல்லை எடப்பாடி பழனிச்சாமி.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்த ஓபிஎஸ் கடந்த 1973 முதல் அதிமுக-வில் இருந்தவர். முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணை தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். அதிமுகவில் வெடித்த ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அந்தக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வைத் தொடங்கி தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்தார். தனிக் கட்சி தொடங்கினால், அதிமுகவுக்கும் உனக்கும் இனி சம்பந்தமில்லை என்று கூறி ஒரேயடியாய் தன்னை ஒதுக்க வாய்ப்பிருக்கும் நினைத்த ஓபிஎஸ், தனி அணியாகச் செயல்பட்டுக் கொண்டே அதிமுகவுக்குள் அடைக்கலமாக தூது அனுப்பிக் கொண்டே இருந்தார்.
ஆனால், எந்த நிபந்தனையும் இன்றி கட்சியில் சேரத்தயாராய் இருக்கிறேன். என்று அவர் தூது விட்ட பிறகும் கூட ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்க்க சம்மதிக்கவே இல்லை எடப்பாடி பழனிச்சாமி. இந்த விஷயத்தில் தனக்கு கைகொடுப்பார்கள் என ஓபிஎஸ் பெரிதும் நம்பிய பாஜக தலைவர்களும் அவரை கைவிட்டுவிட்டதால் என்டிஏ-வில் இருந்து வெளியேறினார். இதனிடையே, இனியும் இவரை நம்பிக் கொண்டிருப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்த அவரது ஆதரவாளர்கள் சிலர் மற்ற அரசியல் கட்சிகளுக்கு தாவும் வேலையில் இறங்கினர். இன்னும் சிலர் மீண்டும் அதிமுகவிலும், புதிய அரசியல் கட்சியான தவெக-விலும் இணைந்தனர். இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளன்று, தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், இனி நான் என்ன சங்கர மடத்துக்கா போவேன்? என்று பேசினார்.
இதற்கு நடுவே ஓபிஎஸ் தனது மகனுடன் சென்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போதே சர்ச்சைகள் வெடித்ததால் சிறிது காலம் அமைதியாக இருந்து வந்தார், அண்மையில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளில் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்ததுடன், ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டது. மீண்டும் திமுக-வே ஆட்சிக்கு வரும் எனப் பேட்டியும் கொடுத்தார் ஓபிஎஸ். அவரது ஆதரவு எம்எல்ஏ-வான உசிலம்பட்டி ஐயப்பனும், ஸ்டாலினே மீண்டும் முதல்வராக வேண்டும் எனச் சட்டமன்றத்தில் வாழ்த்தி முழங்கினார்.
இதுகுறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, ஓபிஎஸ்ஸை சேர்க்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தால் இபிஎஸ் கூட்டணியை விட்டுப் போய்விடுவார் என பயந்தே அவரை பாஜக கண்டுகொள்ளவில்லை. மூன்று முறை முதல்வராக இருந்த தான், இப்போது ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்குச் செல்வது சரியாக இருக்காது என்று சொல்லி விஜய் பக்கம் போகவும் ஓபிஎஸ் மறுத்துவிட்டார். அதன்பிறகே திமுக தரப்புடன் பேச்சுவார்த்தை தீவிரமானது. கட்சியில் இணைந்தால் உரிய மரியாதை அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்த திமுக தலைமை, ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலருக்கும் வாய்ப்பளிக்கலாம் எனச் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. அதனால்தான் முதலில் தனது ஆதரவாளர்களை அனுப்பிவிட்டு இப்போது அவரும் திமுகவில் இணைந்துள்ளார் என்றனர்.























