முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் - கேரள தரப்பில் மனு
முல்லை பெரியாறு அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. ஆகையால் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு மீண்டும் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை நூற்றாண்டுகளைக் கடந்தும் வலுவாகவே உள்ளது. முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி பெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான, கேரளா எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. ஆனால் கேரளா அரசுகள் காலந்தோறும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. முல்லைப்பெரியாறு அணை இடிந்துவிடும், முல்லைப் பெரியாறு அணையால் கேரளா அழிந்துவிடும், முல்லைபெரியாற்றின் குறுக்கே கேரளாவே புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றத்திலும் இதே கோரிக்கையை கேரளா அரசு முன்வைத்து வருகிறது. ஆனாலும் உச்சநீதிமன்றம், எத்தனையோ குழுக்கள் அமைத்து ஆராய்ந்து பார்த்தாகிவிட்டது. அத்தனை குழுக்களுமே முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என்கின்றன. இந்த ஒரு நூற்றாண்டில் எத்தனையோ நிலநடுக்கம், புயல், மழை வந்த போதும் அவற்றை எதிர்கொள்ளக் கூடியதாக வலுவான நிலையில்தான் தற்பொழுது வரை முல்லைப் பெரியாறு அணை இருக்கிறது. மேலும், இதன் பின்னணியில், முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாக மேற்பார்வைக் குழுக் கூட்டத்தைக் கூட்ட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதிலும், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று கேரள மாநில அரசு தொடர்ச்சியாக கூறி வருகின்றது. 16 வயதினிலே திரைப்படத்தில் சப்பாணி வேடத்தில் நடித்த கமல்ஹாசன் சந்தைக்குப் போகனும்.. ஆத்தா வையும் என்கிற வசனத்தை திரும்ப திரும்ப உச்சரிப்பார். அதேபோலதான் கேரளாவும் முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்ட வேண்டும் என பேசி வருகிறது என்பதும் குறிப்பிடதக்கது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தின் எந்தவொரு செயலும் கேரளாவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிலர் தேவையற்ற பிரச்சாரம் செய்து வருவதாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே நீண்டகால பிரச்சனை இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதி கேரளாவிற்குள் இருந்தாலும், அதன் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் தண்ணீர் தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களின் உயிர்நாடி. 2014 ஆம் ஆண்டு தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, அணை பாதுகாப்பானது என்றும், ஆனால் அணையின் நீர்த்தேக்கத்தில் நீர் மட்டத்தை 142 அடியாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியது. பின்னர் அணையை நிர்வகிக்க மேற்பார்வைக் குழுவை அமைத்தது.முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் தற்போதுள்ள அணையை வலுப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.





















