திருப்பரங்குன்றம் சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு.. நிபந்தனையற்ற மன்னிப்பு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன !
Madurai Hc ; 144 தடை உத்தரவு போட்ட மதுரை மாவட்ட ஆட்சியரை எப்படி மன்னிக்கலாம் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை, நீதிபதி GR சுவாமிநாதன் முன்பாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், அறுபடை வீடுகளில் முதற்படை வீடாகத் திகழ்கிறது. இந்த மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சில சிக்கல்கள் நீடித்து வந்தன. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தனர். இந்தத் தீர்ப்பு, தமிழகம் முழுவதும் உள்ள இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தனிநீதி வழங்கிய தீர்ப்பின்படி மலை உச்சியில் தீபம் ஏற்றாமல், 144 தடை விதித்தது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு : " அப்போதிருந்த சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்ட அமைதியை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகின்றேன். காவல்துறையினரை தவறான வார்த்தைகளில் பேசி, தாக்கி பேரிகார்டுகளை தூக்கி எறிந்து பிரச்னை செய்தனர். பக்தர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு போடப்பட்டது. மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது” எனவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி விசாரணை
அப்போது..”திருப்பரங்குன்றம் வழக்கில் தர்கா நிர்வாகம் மற்றும் மற்ற எதிர்மனுதாரர்கள் மேல்முறையீடு சென்றது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு சென்றதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் துணை ஆணையாளர் கோயில் செயலாளராகியோரை எல்லாம் மன்னிக்கலாம், ஆனால் 144 தடை உத்தரவு போட்ட மதுரை மாவட்ட ஆட்சியரை எப்படி மன்னிக்கலாம் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், அடுத்த விசாரணையின் போது மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் துணை ஆணையாளர் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் ஆஜராகத் தேவையில்லை, திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை மார்ச் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.























