மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீ விபத்தை காவல்துறையினர் சரிவர விசாரிக்கவில்லை என கூறி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கு
![மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு CBI investigation transfer for the fire accident at Madurai Meenakshi Amman temple மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/08/3ad42d04f3ab959d70530920c699961d1662617503385102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீ விபத்தை காவல்துறையினர் சரிவர விசாரிக்கவில்லை என கூறி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில், வழக்கை முடித்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்த சுடலைமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் கோயிலின் 5 நுழைவு வாயில் மற்றும் கோயிலுக்குள் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தீப்பெட்டி, சிகரெட், பீடி உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. இந்நிலையில், கடந்த 02.02.2018ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் பெருமளவு சேதமடைந்தது. இந்த விபத்தில் 52 கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. 56 சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமானது.
இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி அரசுக்கு அளித்த அறிக்கையில், தீ விபத்துக்கும், சேதத்துக்கும் கோயில் இணை ஆணையர் மட்டுமே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகம விதிகளை பின்பற்றாமல் கோயில் வளாகத்தில் கடைகள் நடத்த அனுமதி வழங்கியதே தீ விபத்துக்கு காரணம். மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து தொடர்பாக கோயில் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலீசாரின் விசாரணை முறையாக நடக்க வாய்ப்பில்லை. எனவே மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தீ விபத்திற்கு யாரும் காரணம் இல்லை என வழக்கை கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கை முடித்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்தி வைத்தனர்.
மற்றொரு வழக்கு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)