பழனி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல் கோயில்களில் ஐப்பசி கிருத்திகை: பக்தர்கள் கூட்டம், சிறப்பு பூஜைகள்!
பழனி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உலகத் தமிழர்களின் முதற்கடவுள் முருக பெருமான் எனவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது பழனி முருகன் கோவில். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.. உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு.
பழனி முருகன் கோயிலில் ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழனி கோயிலுக்கு வருகை புரிந்தனர். அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்க மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜை நடைபெற்றது. உள்ளூர்,வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை, வின்ச் மூலம் கோயில் சென்றனர். பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். கோயில் சார்பில் இலவச பிரசாதம், அன்னதானம் நாள் முழுவதும் வழங்கப்பட்டது.
மாலையில் திருக்கல்யாணம் மண்டபத்தில் விளக்கு பூஜை நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. காமாட்சி மவுனகுருசாமி மடத்தில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, குட்டூர் அண்ணாமலையார் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி, குள்ளமனம்பட்டி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.





















