Republic Day: ஜனவரி 26ம் தேதியை ஏன் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்? இதான் உண்மையான வரலாறு!
Republic Day: ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு தினமாக கொண்டாடுவதற்கான உண்மையான காரணம் என்னவென்று கீழே விரிவாக காணலாம்.

இந்திய நாட்டிற்கு எப்போதும் மிகவும் முக்கியமான நாட்கள் இரண்டு நாட்கள். ஒன்று ஆகஸ்ட் 15ம் தேதியான சுதந்திர தினம். மற்றொன்று ஜனவரி 26ம் தேதியான குடியரசு தினம். இந்திய நாட்டின் 77வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது.
குடியரசு தினம்:
குடியரசு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால், ஏன் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது? எதற்காக கொண்டாடப்படுகிறது? என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதற்கான உண்மையான காரணத்தை நாம் கீழே காணலாம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளான ஜனவரி 26ம் தேதியே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது என்று நமக்குத் தெரியும். ஆனால், இந்த நாளில் அமல்படுத்தப்பட்டதற்கான உண்மையான காரணத்திற்கு பின்பு ஒரு பெரிய வரலாறு உள்ளது.
ஜனவரி 26 ஏன்?
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பே குடியரசு. இந்த அரசமைப்பை பின்பற்றும் நாடுகள் அனைத்தும் குடியரசு நாடுகள் ஆகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதியே அப்போது இருந்த 308 எம்பி-க்களின் ஒப்புதலுடன் கையெழுத்தானது. ஆனால், ஜனவரி 24ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக, நாட்டின் தேசத் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தி இந்திய விடுதலையை அறிவித்தார். அவர் அறிவித்த நாள்தான் ஜனவரி 26. 1929ம் ஆண்டு இந்த ஜனவரி 26ம் தேதி காந்தி காங்கிரஸ் சார்பில் இந்திய விடுதலையை அறிவித்த பிறகு, நாட்டில் சுதந்திர போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.
நேரு திட்டவட்டம்:
காந்தி இந்திய விடுதலையை அறிவித்த அந்த ஜனவரி 26ம் தேதியே இந்திய குடியரசு தின நாளாக கொண்டாட வேண்டும் என்று, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முடிவு செய்தார். அதன்படியே, 1950ம் ஆண்டு நாட்டின் குடியரசு தினம் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன்பு வரை, ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட அதாவது 1935ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம்தான் பின்பற்றப்பட்டு வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது நாட்டின் கவர்னர் ஜெனரலாக மவுண்ட் பேட்டன்பிரபுவே இருந்தார். சுதந்திரம் அடைந்த பிறகும் அவரே நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்தார்.
குடியரசு நாடு:
பின்னர், அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர், அது 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி அப்போது இருந்த எம்பிக்களால் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், இந்திய விடுதலையை காந்தி அறிவித்த நாளான ஜனவரி 26ம் தேதியை போற்றும் விதமாக 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, இந்தியா குடியரசு நாடாகவும் உருமாறியது.






















