3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் மூன்று வயது சிறுமியை அவரது உறவினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தி கொலை செய்து புதைத்துள்ளார்.

திருப்பதியில் மூன்று வயது சிறுமியை அவரது உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் கொடூரம்:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தாண்டு கொல்கத்தா மருத்துவர் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலம் திருப்பதியில் மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. மூன்று வயது சிறுமியை அவரது உறவினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தி கொலை செய்து புதைத்துள்ளார். சிறுமி வசிக்கும் அதே காலனியில்தான் குற்றம்சாட்டப்பட்ட 22 வயது நபரும் வசித்து வந்திருக்கிறார்.
நேற்று, குழந்தைக்கு சாக்லேட் தருவதாகக் கூறி, வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அவரை கொன்றுவிட்டு உடலை வயலில் புதைத்ததாக காவல்துறை தரப்பு கூறுகிறது. சிறுமி வீடு திரும்பாததையடுத்து, பெற்றோர் அவரைத் தேடத் தொடங்கி இருக்கின்றனர்.
குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்:
இறுதியில், குற்றம் சாட்டப்பட்டவருடன் அவரை கடைசியாகப் பார்த்ததாகக் கூறி போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் சுப்பராயடு கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு காவலில் வைக்கப்பட்டார்.
குற்றம்சாட்டப்பட்ட நபர் சந்தேகப்படும்படி நடந்து கொண்டார். அவரிடம் விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார். பள்ளிக்கு அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். பின்னர், அவரது உடலை கொன்று வயலில் புதைத்துள்ளார்.
சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். கொல்லப்பட்ட சிறுமியின் தாயார், குற்றம் சாட்டப்பட்டவரை தனது சகோதரனைப் போல நடத்தி இருக்கிறார். அடிக்கடி அவர்கள் வீட்டில் நேரத்தை செலவிட்டு குழந்தையுடன் விளையாடி இருக்கிறார்" என்றார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கடந்தாண்டு, இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் ஒரு அதிர்ச்சி தரவை பகிர்ந்தார்.
அதாவது, ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

