![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Amarnath Yatra: அமர்நாத் யாத்திரையில் மேலும் 3 பேர் உயிரிழப்பு.. மொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்வு..
அமர்நாத் யாத்திரையில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
![Amarnath Yatra: அமர்நாத் யாத்திரையில் மேலும் 3 பேர் உயிரிழப்பு.. மொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்வு.. Three people have died in the Amarnath Yatra since Sunday, taking the death toll to 30. Amarnath Yatra: அமர்நாத் யாத்திரையில் மேலும் 3 பேர் உயிரிழப்பு.. மொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்வு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/18/06953eecebbaf4b5d98fbac11af371741689669413985589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜம்மு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகின்றனர். தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் இந்த அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இதனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருவார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோயில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு விவாதித்தது. இதில் அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 62 நாட்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 13 வயது முதல் 70 வரையிலான எந்தவொரு தனிநபரும் இந்த யாத்திரியை மேற்கொள்ளலாம். அதேநேரம், 6 வாரம் மற்றும் அதை தாண்டிய கருவுற்ற பெண்கள் யாரும் யாத்திரை மேற்கொள்ள அனுமதி இல்லை.
அமர்நாத் யாத்திரையில் நீண்ட தூரம் மக்கள் பயணம் மேற்கொண்டு செல்லக்கூடிய சூழல் இருப்பதால் பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இந்த 3 பேரும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர். 3 பேரில் இரண்டு பேர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளனர்.
புனித யாத்திரையின் போது ஒருவர் பாஹல்கம் பாதையில் செல்லும் போதும், இருவர் பைத்தால் பாதையில் செல்லும் போதும் உயிரிழந்தனர். அமர்நாத் யாத்திரையில் உயரம் அதிகம் இருப்பதால் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்படும். அப்படி மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலி ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 2.30 லட்சம் மக்கள் அமர்நாத் யாத்திரைக்கு தரிசனத்திற்காக வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)