"சாரி.. என்னை மன்னிச்சிடு சின்னு" ராஜஸ்தானில் ஒரு அனிதா.. மாணவனை பலி வாங்கிய நீட் தேர்வு!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்டார். விடுதியில் உயிரிழந்த நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அறையில் தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டது. அதில், "சின்னு, என்னை மன்னித்துவிடு" என எழுதப்பட்டிருந்தது.

ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு பயிற்று பெற்று வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவிட்டு உயிரை விட்டுள்ளார்.
உருக்கமான தற்கொலை கடிதம்:
இளங்களை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெற்றிபெற்ற பிறகும், அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சில சமயங்களில், நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இம்மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதில்லை மற்ற மாநிலங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. மற்ற இடங்களை காட்டிலும் கோட்டாவில் அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் இருக்கின்றன.
இதன் காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்து எல்லாம் மாணவர்கள் அங்கு வந்து படிப்பது உண்டு. ஆனால், கடும் மன அழுத்தம் காரணமாக, நீட் தேர்வு பயற்சிக்கு தயாராகி வரும் மாணவர்கள், தற்கொலை செய்து கொள்வது கோட்டாவில் அதிகளவில் நடந்து வருகிறது.
ராஜஸ்தானின் அனிதா:
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்டார். மாணவரின் பெயர் ரோஹித் பாட்டி. விடுதியில் உயிரிழந்த நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அறையில் தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டது. அதில், "மன்னிக்கவும், சின்னு, என்னை மன்னித்துவிடு" என எழுதப்பட்டிருந்தது.
தற்கொலைக் குறிப்பில் அவர் யாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பதைக் கண்டறிய போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பீவாரில் உள்ள ராஸைச் சேர்ந்த ரோஹித் பாட்டி, ஒரு வருடத்திற்கு முன்புதான் ஜோத்பூருக்கு வந்துள்ளார். அங்கு, சௌபாஸ்னி ஹவுசிங் போர்டு பகுதியில் அமைந்துள்ள 'தீக்சா வகுப்புகள்' பயிற்சி வகுப்பில் சேர்ந்து, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
விடுதி உரிமையாளர்தான் அவர் தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதிர்ச்சியூட்டும் செய்தியைக் கேட்டு, ரோஹித்தின் தந்தை மோகன்லால் மாலி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் ஜோத்பூர் சென்றனர். எய்ம்ஸில் பிரேத பரிசோதனை செய்த பிறகு, போலீசார் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

