Nitish Kumar: முதல்வர் பதவி வேண்டாம்.. நிதிஷ்குமார் ராஜினாமா.. அடுத்த பிளான் இதுதான்!
நிதிஷ்குமார் ஏற்கனவே சட்டமன்றம் மற்றும் மக்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். தற்போது மாநிலங்களவை செல்வதன் மூலம் அவர் புதிய சாதனைப் படைக்கவுள்ளார்.

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால முதலமைச்சர்
பீகார் மாநிலத்தில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் பதவி வகித்து வந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பீகார் மாநில முதலமைச்சராக செயல்பட்டு வரும் நிதிஷ் குமார் இந்தியாவின் நீண்ட கால முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார்.
இப்படியான நிலையில் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தான் நிதிஷ்குமார் 10வது முறையாக பதவியேற்றார். ஆனால் 4 மாதங்களிலேயே அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களவை செல்ல விருப்பம்
அதில், “கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, நீங்கள் தொடர்ந்து என் மீது நம்பிக்கையையும் ஆதரவையும் வைத்துள்ளீர்கள். மேலும் அந்த நம்பிக்கையின் பலத்தில்தான் நாங்கள் பீகாருக்கும் உங்கள் அனைவருக்கும் முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறோம். உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவின் சக்திதான் இன்று பீகார் வளர்ச்சி மற்றும் கண்ணியத்தின் புதிய பரிமாணத்தை வழங்க உதவியது. இதற்காக, கடந்த காலங்களிலும் பலமுறை உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்து வந்துள்ளேன்.
எனது நாடாளுமன்ற பயணத்தின் தொடக்கத்திலிருந்தே, பீகார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை என் இதயத்தில் இருந்து வருகிறது. இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இந்த முறை நடைபெறும் தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன்.
உங்களுடனான எனது உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்றும், வளர்ந்த பீகாரை உருவாக்க உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எனது உறுதிப்பாடு உறுதியாக இருக்கும் என்றும் முழு நேர்மையுடன் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். அமைக்கப்படும் புதிய அரசாங்கத்திற்கு எனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
நிதிஷ்குமார் ஏற்கனவே சட்டமன்றம் மற்றும் மக்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். தற்போது மாநிலங்களவை செல்வதன் மூலம் அவர் புதிய சாதனைப் படைக்கவுள்ளார். அதேசமயம் நிதிஷூக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பீகாரின் அடுத்த முதலமைச்சராக யார் வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள். அங்கு பாஜக ஆட்சி அமைக்கப் போகிறதா அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த யாரும் முதலமைச்சர் ஆவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.























