Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
New Waste Management Rules 2026: குப்பைகளைப் பிரித்துப்போட புதிய விதிகள் கொண்டு வரப்பட்டு, 4 வண்ணத் தொட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

ஏப்ரல் 1 முதல் குப்பைகளைப் பிரித்துப் போடும் வகையில் 4 வண்ணத் தொட்டிகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. மக்களும் நிறுவனங்களும் இதைப் பின்பற்றி குப்பைகளைப் பிரித்து அளிக்காவிட்டால், அபராதமும் அளிக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன்படி, 2 குப்பைத் தொட்டி முறை மாற்றப்பட்டு, 4 குப்பைத் தொட்டி மூறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குப்பைகளைக் கையாளும் முறை மேம்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
இதுநாள் வரையிலான நடைமுறை என்ன?
- பச்சை வண்ண குப்பைத் தொட்டியில் ஈரமான குப்பைகள்
- நீல வண்ண குப்பைத் தொட்டியில் உலர் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, குப்பை மேலாண்மை செய்யப்பட்டு வந்தது.
இனி,
- பச்சை (ஈரக் குப்பைகள்): உணவு மிச்சங்கள், காய்கறித் தோல்கள் மற்றும் பிற மட்கும் கழிவுகள்.
- நீலம் (உலர் குப்பைகள்): நெகிழி, காகிதம், கண்ணாடி மற்றும் உலோகம்.
- சிவப்பு (சுகாதாரக் குப்பைகள்): டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் அதுபோன்ற கழிவுகள்.
- கருப்பு (ஆபத்தான/ சிறப்புக் கழிவுகள்): மின்விளக்குகள், மருந்துகள், வண்ணப்பூச்சு மற்றும் மின்னணுக் கழிவுகள்.
இவ்வாறு 4 பிரிவுகளாகப் பிரித்து குப்பைகளைப் பெறுவதன் மூலம், குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவை தரம் பிரிக்கப்பட்டுப் பெறப்பட உள்ளது. இதனால் குப்பைக் கிடங்குகளின் சுமை குறையும் எனக் கூறப்படுகிறது.
இந்த குப்பைகளை மேலே சொன்ன வகையில் பிரித்துப் போடவில்லையெனில், குப்பைகளைப் பெற மறுத்துவிட வேண்டும் எனவும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
குப்பைகள் அள்ளும் வண்டிகளிலும் 4 வண்ணக் குப்பைத் தொட்டிகளை வைக்கும் வகையில், வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை மீறுவோர் மீது, மாசுபடுத்துவோருக்கு அபராதம் (polluter pays) கொள்கையின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படலாம்.

வணிக நிறுவனங்களுக்கு எப்படி?
ஹோட்டல்கள், பெரிய குடியிருப்பு வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற பெருமளவு கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்கள், ஈரக் கழிவுகளைத் தங்கள் வளாகத்திலேயே பதப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கழிவு மேலாண்மை நடைமுறைகளைக் கண்காணிக்கவும், பிராந்தியங்கள் முழுவதும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் இணையவழி கண்காணிப்பு முறையையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
























