![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'ஜனநாயகத்தை கொல்லும் சதிக்கு எதிராக போராட வேண்டும்' - மல்லிகார்ஜூன கார்கே முழக்கம்!
”கட்சியில் பெரியவர், சிறியவர் என்று யாரும் இல்லை. கட்சியை வலுப்படுத்த உண்மையான காங்கிரஸ் வீரராக பணியாற்றுவேன். எனக்கு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் சமம்” - மல்லிகார்ஜூன கார்கே
!['ஜனநாயகத்தை கொல்லும் சதிக்கு எதிராக போராட வேண்டும்' - மல்லிகார்ஜூன கார்கே முழக்கம்! Mallikarjun Kharge stresses on need to fight against conspiracy to kill democracy 'ஜனநாயகத்தை கொல்லும் சதிக்கு எதிராக போராட வேண்டும்' - மல்லிகார்ஜூன கார்கே முழக்கம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/0636d55a647d5a11d35d32969b8814ad1666184213897574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டெல்லியில் சோனியா காந்தியை நேரில் சந்தித்து மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்துகளைப் பெற்றார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சோனியா காந்தியை மல்லிகார்ஜூன கார்கே நேரில் சந்தித்தார்.
அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் சமம்
மேலும் முன்னதாக மல்லிகா அர்ஜூன கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, “ஜனநாயகத்தை கொல்லும் சதிக்கு எதிராக நாம் போராட வேண்டும்” எனப் பேசியுள்ளார்.
மேலும் கட்சியில் பெரியவர், சிறியவர் என்று யாரும் இல்லை. கட்சியை வலுப்படுத்த உண்மையான காங்கிரஸ் வீரராக பணியாற்றுவேன். எனக்கு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் சமம். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை அச்சுறுத்தும் பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் கார்கேவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த சசி தரூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருப்பது ஒரு பெரிய கவுரவம் மற்றும் மிகப்பெரும் பொறுப்பு. அந்தப் பணியில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சக ஊழியர்களின் ஆதரவைப் பெற்றதும், காங்கிரஸின் பல நலம் விரும்பிகளின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் இந்தியா முழுவதும் கொண்டு செல்வது ஒரு பாக்கியம் ” எனப் பேசியுள்ளார்.
கடந்து வந்த பாதை
கார்கே 1969 இல் தனது சொந்த ஊரான குல்பர்கா நகர காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து மாநில அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். 1972 இல் அவர் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் அரசியலில் நுழைந்தார். அப்போது முதல் வெற்றியை பதிவு செய்த அவர் அதற்கு பின்னரும் தொடர்ந்து எட்டு முறை வெற்றிபெற்று சாதனை படைத்தார். 1976ஆம் ஆண்டு தேவராஜ் அரசில் முதல் முறையாக அமைச்சரானார்.
1970களின் பிற்பகுதியில் இந்திரா காந்தியுடனான மோதலுக்குப் பிறகு தேவராஜ் கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸை (யு) என்ற கட்சியை தொடங்கினார். தேவராஜ் மீதான பற்றால் அவரின் கட்சியில் கார்கே இணைந்தாலும், 1980 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவர் காங்கிரஸுக்குத் திரும்பினார்.
1980இல் குண்டுராவ் அமைச்சரவையிலும், 1990ல் எஸ் பங்காரப்பா அமைச்சரவையிலும் 1992 முதல் 1994 வரை எம் வீரப்ப மொய்லி ஆட்சியிலும் அவர் அமைச்சராக இருந்தார். 1996-99ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் மற்றும் 2008-09, மற்றும் 2005-08 முதல் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். தேசிய அரசியலுக்கு செல்வதற்கு முன்பு 2009 இல், அவர் முதல் முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர்த்துறை அமைச்சராகவும், பின்னர் ரயில்வே மற்றும் சமூக நீதி மற்றும் மேம்பாட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
2014இல் காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்த பிறகு மக்களவையில் அவர்களின் பலம் 44ஆக குறைந்தது. அப்போதுதான், கார்கேவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. குல்பர்கா தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்ற கார்கே, மக்களவையில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது, மகாபாரதத்தை மேற்கோள் காட்டி பேசிய அவர், "நாங்கள் மக்களவையில் 44 பேராக இருக்கலாம், ஆனால் நூறு கௌரவர்களால் பாண்டவர்கள் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்" என்றார்.
2019ஆம் ஆண்டில், தேர்தல் வாழ்க்கையில் முதன்முறையாக, கார்கே தோல்வியை சந்தித்தார். இதையடுத்து, கட்சி அவரை மாநிலங்களவைக்கு அனுப்பியது. மேலும், பிப்ரவரி 2021 இல் அவரை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக்கியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)