![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கோடநாடு வழக்கு; மேல் விசாரணைக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம்
கோட நாடு வழக்கின் மேல் விசாரணை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
![கோடநாடு வழக்கு; மேல் விசாரணைக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம் kodanadu case No bar to further hearing Supreme Court கோடநாடு வழக்கு; மேல் விசாரணைக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/19/d362b5d525976f88866d45c8527c2f65_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடை கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடை கோரி சாட்சி அனுபவ் ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே ரவியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘கோட நாடு வழக்கின் மேல் விசாரணை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. கோடநாடு விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுபோல் இருக்கிறது. மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் அனுமதியின்றி மறுவிசாரணை நடத்தப்படுவதாகவும், மறுவிசாரணை நடத்திக்கொண்டே போனால் வழக்கின் விசாரணை முடிவில்லாமல்தான் செல்லும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, கோடநாடு வழக்கில் மேல் விசாரணைக்குத் தடைகேட்ட வழக்கில் கூடுதல் விசாரணைக்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி நிர்மல் குமார் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணையைத் தொடரலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கு எந்த நிலையில் இருந்தாலும் அதனை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் கூறியுள்ளது.
Kodanad Issue: ‛நாவலைவிட மர்மமானது கோடநாடு’ - செல்வப்பெருந்தகை; ‛கொண்டு வந்தது இபிஎஸ் தான்’ -அமைச்சர்!
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த காவல்துறைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் கடந்த 27ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், சம்சிர் அலி, தீபு ,சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)