கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
ஒரு வழி பயண கட்டணம் சுமார் ரூ.12,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதயான் திட்டம் கீழ், சில பயணச்சீட்டுகள் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை குறைந்த விலையில் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவின் போக்குவரத்து துறை என்பது தரைவழி, கடல் வழி மற்றும் வான்வழியை உள்ளடக்கியதாகும். இந்த போக்குவரத்து சேவை நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடல் வழி விமான சேவை உள்ளது. நாட்டின் முதல் கடல் வழி விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் கொச்சி- லட்சத்தீவு இடையே கடல் விமான சேவை தொடங்குவது தொடர்பான புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
கேரளாவின் போக்குவரத்து துறையில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளது. அடுத்த மாதம் முதல் கொச்சியில் இருந்து லட்சத்தீவு தீவுகளுக்கான கடல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சேவையை கொச்சி சர்வதேச விமான நிலையம் தலைமையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் துணை நிறுவனம் செயல்படுத்தவுள்ளது. ஏற்கெனவே அனைத்து சோதனைப் பறப்புகளும் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வழி பயண கட்டணம் சுமார் ரூ.12,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் உதயான் திட்டம் கீழ், சில பயணச்சீட்டுகள் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை குறைந்த விலையில் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சாதாரண பயணிகளுக்கும் இந்த சேவை ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவைக்கு தி ஹவிலாண்ட் நிறுவனம் தயாரித்த சிறப்பு கடல் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே நேரத்தில் 18 முதல் 20 பயணிகள் வரை அமரக்கூடிய வசதி இதில் உள்ளது. தற்போது லட்சத்தீவுபிற்கு பயணிக்க ஹெலிகாப்டர் சேவைகள் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதன் கட்டணம் ஒரு பயணத்திற்கு சுமார் ரூ.60,000 ஆக இருப்பதால், பொதுமக்களுக்கு அது சாத்தியமற்றதாக இருந்தது. புதிய கடல் விமான சேவை அந்தச் சுமையை குறைக்கும் எனக் கருதப்படுகிறது.
கடல் விமான சேவை என்ற யோசனை முதன்முதலில் 2013-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. ஆனால் அப்போது மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழலியர்கள் எழுப்பிய எதிர்ப்புகளால் திட்டம் நிறுத்தப்பட்டது. சமீபத்தில் மீண்டும் முயற்சிகள் தொடங்கப்பட்டு, 2024 நவம்பர் 11 அன்று கொச்சியின் பின்வெள்ளப் பகுதிகளில் இருந்து மாட்டுப்பெட்டி அணை வரை சோதனை பறப்புகள் நடத்தப்பட்டன. அவை வெற்றிகரமாக நிறைவு பெற்றதன் அடிப்படையில் இப்போது திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.முதலில் கொச்சி – லட்சத்தீவு இடையே சேவை தொடங்கப்பட்டாலும், பின்னர் கேரளாவின் பிற பகுதிகளுக்கும் (இடுக்கி அணை, வயனாடு ஏரி போன்றவை) இந்த கடல் விமான சேவை விரிவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில் இந்த சேவை முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சேவைக்கு டிஜிசிஏ விதிமுறைகள் மற்றும் உதயான் திட்ட வழிகாட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்படுவதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். நீர்மட்டத்தில் பறக்கும் மற்றும் இறங்கும் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த சேவை தொடங்கப்படுவதால் கேரளா – லட்சத்தீவு இடையேயான பயண நேரம் குறையவுள்ளது. சுற்றுலா துறை மிகுந்த வளர்ச்சியை அடையும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக, சர்வதேச சுற்றுலா பயணிகள் எளிதில் லட்சத்தீவு தீவுகளுக்கு சென்று சேரும் வழி உருவாகும்.




















