பெங்களூர் விமான நிலையத்தில் பரபரப்பு.. நூலிழையில் உயிர் தப்பிய 179 பயணிகள்.. நடந்தது என்ன?
ஏர் இந்தியா விமானம் AI2651 என்ற எண் கொண்ட அந்த விமானம் ஓடுபாதையில் தரையிறங்கிய கணத்தில், அதன் வால் பகுதி திடீரென ஓடுபாதையில் பலமாக மோதியது.

டெல்லியிலிருந்து பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
எப்படி நடந்தது?
AI2651 என்ற எண் கொண்ட அந்த விமானம் ஓடுபாதையில் தரையிறங்கிய கணத்தில், அதன் வால் பகுதி (Tail) திடீரென ஓடுபாதையில் பலமாக மோதியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் விமானி மிகவும் சாதுரியமாகச் செயல்பட்டு, விமானத்தை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பாதுகாப்பாகத் தரையிறக்கினார். இதனால் விமானத்தில் பயணித்த 179 பயணிகளும், விமானப் பணியாளர்களும் எந்தவித காயமுமின்றி நல்வாய்ப்பாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணை
இந்த விபத்துக்கான காரணம் குறித்து முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர் இந்தியா விமானம் தரையிறங்குவதற்குச் சற்று முன்பாக, அதே ஓடுபாதையிலிருந்து ஒரு பிரம்மாண்ட போயிங் 747 விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்த போயிங் விமானத்தின் சக்திவாய்ந்த என்ஜின்களிலிருந்து வெளியேறிய கடுமையான காற்றுச் சுழல், பின்னால் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தைத் தாக்கியுள்ளது. விமானப் போக்குவரத்து நிபுணர்களின் கூற்றுப்படி, முன்னால் செல்லும் பெரிய விமானங்களின் பின்னால் ஏற்படும் இத்தகைய காற்றுச் சுழற்சியானது, பின்னால் வரும் விமானங்களின் நிலைத்தன்மையை திடீரெனப் பாதித்து, நிலைதடுமாறச் செய்யும் அபாயம் கொண்டது.
திறமையாக கையாண்ட விமானி
இத்தகைய ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்த ஏர் இந்தியா விமானி, உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார். வழக்கமான பாதுகாப்பு நடைமுறையின்படி, தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு, விமானத்தை மீண்டும் மேலே கொண்டு சென்று வானில் வட்டமடிக்கச் செய்தார். இருப்பினும், இந்தச் செயல்பாட்டின் போது விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையில் மோதியது (Tail-strike). சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) விளக்கப்படி, ஒரு விமானம் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ அல்லது தரையிறங்குவதை ரத்து செய்துவிட்டு மீண்டும் மேலே எழும்பும்போதோ, ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சாய்வதால் அதன் வால் பகுதி தரையில் மோதுவது 'வால்-தாக்குதல்' என அழைக்கப்படுகிறது. இது சில நேரங்களில் விமானத்தின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்து, ஓடுபாதையை விட்டு விலகும் ஆபத்தையும் ஏற்படுத்தும்.
பயணிகளுக்கான மாற்று ஏற்பாடு
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான அந்த ஏர் இந்தியா விமானம் விரிவான விசாரணைக்காகவும், தணிக்கைக்காகவும் தற்காலிகமாகத் தரையிறக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெங்களூருவிலிருந்து மீண்டும் டெல்லிக்குத் திரும்பவிருந்த AI2652 என்ற ஏர் இந்தியா விமானச் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியாவின் தரைப்படை குழுவினர் பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்! - தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும்; வானிலை மையம் அதிரடி எச்சரிக்கை
அரசு விதிமுறைகள் மற்றும் நிறுவப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்க, இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள விமான நிறுவனம், தங்களுக்கு பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே எப்போதுமே முதன்மையானது என்றும் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது.
Before You Go
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
ட்ரெண்டிங் செய்திகள்























