Corona Cases in India: ‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதையும் புரட்டி எடுத்தபின், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. சீனா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிராவில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
கடந்த 18-ம் தேதி, இந்தியாவில் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியான நிலையில், நேற்று 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து, 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 430 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மகாராஷ்டிராவில் 209 பேர், டெல்லியில் 104 பேர், குஜராத்தில் 83 பேர், தமிழ்நாட்டில் 69 பேர், கர்நாடகாவில் 47 பேர், உத்தரப்பிரதேசத்தில் 15 பேர், மேற்கு வங்கத்தில் 12 பேருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவைகளின் இருப்பை உறுதி செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கொரோனாவால் இந்தியாவில் எத்தனை பேர் உயிரிழப்பு.?
இதனிடையே, கொரேனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவில் 4 பேரும், கேரளாவில் 2 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் என்ன.?
தமிழ்நாட்டில் தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மக்கள் அதிகம் கூடும் கண்காட்சி, திருவிழாக்கள் போன்றவற்றில் சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்கவும், தேவைப்பட்டால், தொற்று பரவாமல் இருக்க, மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
2 புதிய வகை கொரோனா - இந்தியாவிலும் பரவல்
சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளை கொரோனா தொற்று அச்சுறுத்திவரும் நிலையில், அதற்கு காரணம் 2 புதிய வகை கொரோனா மாறுபாடு வைரஸ்கள்தான என உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது. அதன்படி, என்பி.1.8.1 மற்றும் எல்எஃப்.7 ஆகிய கொரோனா திரிபு வைரஸ்களால் தான், தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 வகை கொரோனாவும் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒருவருக்கு என்பி.1.8.1 (NB.1.8.1) வைரஸ் தொற்றும், குஜராத்தில் 4 பேருக்கு எல்எஃப்.7 (LF.7) வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.
எனினும், இந்த மாறுபாடுகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவை அபாயகரமானவை என்று இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த புதிக வகை கொரோனா வைரஸ்கள் வேகமாக பரவும் தன்மை கொண்டது என கூறப்படுவதால், அனைவரும் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.





















