டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி மாணவர்களின் தொடர் போராட்டம் வாபஸ்; 3 கோரிக்கைகளையும் ஏற்ற மத்திய அரசு- சிஜேபி அறிவிப்பு

டெல்லியில் நடைபெற்று வந்த தொடர் போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றது கரப்பான் ஜனதா கட்சி - அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த சில வாரங்களாக நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை வலியுறுத்தி, கரப்பான் ஜனதா கட்சி சார்பில் நடைபெற்று வந்த மாபெரும் தொடர் போராட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மத்திய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டத்தைக் கைவிடுவதாக அக்கட்சியின் தேசியத் தலைமை அறிவித்துள்ளது.
என்னென்ன கோரிக்கைகள்?
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். இரண்டாவதாக, நீட் தேர்வால் உயிரிழந்த அனைத்து மாணவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மூன்றாவதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்தப் போராட்டத்தில் பகல் இரவு பாராமல் தொடர்ச்சியாகப் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனால், டெல்லி தலைநகர் முழுவதும் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வந்தது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கப் பெருமளவில் காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
அவசரப் பேச்சுவார்த்தை
போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு தரப்பில் இருந்து கரப்பான் ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடம் அவசரப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவினர், கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதிக்கட்டக் கூட்டத்தில், சிஜேபியின் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசு அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து, டெல்லி போராட்டத்தை நல்லெண்ண அடிப்படையில் உடனடியாகக் கைவிடுவதாக கரப்பான் ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்























