4 மாநிலங்கள்.. 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்.. பாஜகவுக்கு சவால் அளிக்குமா இந்தியா கூட்டணி?
இந்தாண்டின் இறுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைகளில் காலியாக உள்ள ஐந்து இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
குஜராத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்:
குஜராத்தில் கர்சன்பாய் பஞ்சாபாய் சோலங்கி மறைவால் கடி (தனி) தொகுதிக்கும், பயானி பூபேந்திரபாய் கந்துபாய் ராஜினாமாவால் விசாவதார் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல, கேரளாவில் பி.வி. அன்வர் ராஜினாமாவால் நீலாம்பூர் தொகுதிக்கும், பஞ்சாபில் குர்ப்ரீத் பாஸ்ஸி கோகியின் மறைவால் லூதியானா மேற்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் நசிருதீன் அகமது மறைவால் காளிகஞ்ச் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் சட்டமன்றத் தொகுதியில் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:
இடைத்தேர்தலுக்கான கால அட்டவணை அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படும். மே 26ஆம் தேதி அதாவது நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 2ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் தேதி ஜூன் 3, 2025 (செவ்வாய்). வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூன் 5, 2025 (வியாழக்கிழமை). வாக்குப்பதிவு நடைபெறும் தேதி ஜூன் 19, 2025 (வியாழக்கிழமை). வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி ஜூன் 23, 2025.
குஜராத்தில் பாஜக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், கேரள, பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆட்சியில் உள்ளன. மக்களவை தேர்தலை தொடர்ந்து ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய இடங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தது.
The Election Commission of India announces the schedule for Bye-election to 5 Assembly Constituencies of Gujarat, Kerala, Punjab and West Bengal. Date of Poll- 19th June Date of Counting of Votes- 23rd June@ECISVEEP pic.twitter.com/8ctfJ89R3r
— SansadTV (@sansad_tv) May 25, 2025
இந்தாண்டின் இறுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.




















