பேருந்து சேவை முடங்கும் அபாயம்! மாணவர்கள், மக்கள் பாதிப்பு: நாளை என்ன நடக்கும்?
கேரளாவில் மாநிலம் முழுவதும் பெரும்பாலான தனியார் பேருந்துகள் செயல்படாது என்பதால் சேவைகள் மிதமான அளவில் மட்டும் செயல்படும் என கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் தனியார் பஸ் இயக்குநர்கள், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் ஜூலை 22 முதல் இன்றும் நாளையும் காலவரையற்ற பணி நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து விலகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பணி நிறுத்தம், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஜூலை 7 அன்று ஒரு நாள் சோதனை பணி நிறுத்தம் நடைபெற்றது. அதையடுத்து அரசு மற்றும் பஸ் சங்கத்தினருக்கிடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆர்.1 சிறப்பு கட்டணத்தை உயர்த்த வேண்டும். பேருந்து ஓட்டுநர் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் முறையை ரத்து செய்ய வேண்டும். 140 கிமீக்கு மேற்ட்ட தூரத்திற்கு அனுமதி பெறும் பேருந்துகளுக்கு உரிய லிமிட்டெட் ஸ்டாப் அனுமதி வழங்கப்பட வேண்டும். அதிக அளவில் விதிக்கப்படும் இ-செல்லான் அபராதங்களை குறைக்க வேண்டும். ஜிபிஎஸ், சிசிடிவி உள்ளிட்ட வாகன கண்காணிப்பு சாதனங்களுக்கான கட்டாய ஏற்பாடுகளை அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். போக்குவரத்து அமைச்சர் கே.பி. கணேஷ்குமார், பேருந்துகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து பதிலளிக்கும்போது, அரசு மாணவர் கட்டண உயர்வை பரிசீலித்து வருகிறது என்றும், பாதுகாப்பு விதிகள் மாற்றம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், உரிய மற்றும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பேருந்துகள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. மாநில அளவில் முக்கிய போக்குவரத்து சேவைகளை வழங்கும் தனியார் பஸ்கள் இப்போது முடங்கும் நிலைக்கு வருவதால், மாணவர்கள், தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான பயணிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு அதிகம் உள்ளது. மாநில அரசின் பேருந்து சேவை மட்டுமே இப்போது சேவை வழங்கும் நிலையில், போக்குவரத்து தடை மிக மோசமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. பேருந்து சங்கத்தினருக்கும், அரசுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பணி நிறுத்தம் தொடருமானால், கேரளாவின் பொதுமக்கள் வாழ்வியல் மீது அதிர்வூட்டம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்ற கூறலாம்.
நாளை கேரளாவில் மாநிலம் முழுவதும் பெரும்பாலான தனியார் பேருந்துகள் செயல்படாது என்பதால் சேவைகள் மிதமான அளவில் மட்டும் செயல்படும் என கூறப்படுகிறது. எனினும் சில வழித்தடங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக வாடகை ஆட்டோ உள்ளிட்ட வாகன சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் ஆட்டோக்கள் இயக்கம் வழக்கம்போல் இருக்கும் என தெரிகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிகிறது. இதுதொடர்பாக அரசு சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.





















