80 பயணிகளுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு வலி! சென்னையில் இருந்து சென்ற ரயிலில் பரபரப்பு
சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற கௌரவ் பாரத் ரயிலில் 80 பயணிகள் திடீரென வாந்தி, பேதி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
![80 பயணிகளுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு வலி! சென்னையில் இருந்து சென்ற ரயிலில் பரபரப்பு Bharat Gaurav Train Food Poisoning 80 Passengers Fall Ill After Eating Food on Chennai-Pune Train, Probe Underway 80 பயணிகளுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு வலி! சென்னையில் இருந்து சென்ற ரயிலில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/29/5eeb3e3f5514863df26c1ffd615d779d1701251971800102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் இணைக்கும் விதமாக நூற்றுக்கணக்கான ரயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைில் இருந்து மகாராஷ்ட்ராவின் முக்கிய நகரமான புனே வரையில் பாரத் கௌரவ் என்ற ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
80 பயணிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு:
வழக்கம்போல, சென்னையில் இருந்து சுமார் 1000 பயணிகளுடன் புனே நோக்கி பாரத் கௌரவ் ரயில் சென்றது. நேற்று இரவு இந்த ரயில் புனேவை சென்றடைந்தது. அப்போது அந்த ரயிலில் பயணம் செய்த சுமார் 80 பயணிகளுக்கு வாந்தி, தலைவலி, வயிற்று வலி, பேதி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உடனடியாக புனே ரயில் நிலையத்திற்கு மருத்துவர்கள் உள்பட மருத்துவ குழுவினரை ரயில்வே நிர்வாகம் வரவழைத்தது. அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்ததனர்.
புனே ரயில் நிலையத்தில் பரபரப்பு:
ரயில் புனேவை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துவிட்டதால் அவர்கள் முன்கூட்டியே மருத்துவ குழுவை புனே ரயில் நிலையத்திற்கு வரவழைத்தனர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரயில்வே ப்ளாட்பாரத்தில் வைத்தே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
பயணிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு ரயிலில் வழங்கப்பட்ட உணவு காரணமா? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரயில் சென்னையில் இருந்து புறப்படும் முன்பு முழுதும் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அப்போது ரயிலில் சமையல் பொருட்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
காரணம் என்ன?
மேலும், பயணிகள் வாந்தி, பேதிக்கு அவர்கள் வாதி ரயில் நிலையத்தில் சாப்பிட்ட சாப்பாட்டால் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சோலாபூரில் இருந்து 180 கி.மீட்டர் தொலைவில் உள்ள வாதி ரயில் நிலையத்தில் அவர்கள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அங்கு சாப்பிட்ட உணவின் காரணமாகவே அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் எந்த உணவும் வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அந்த ரயில் நள்ளிரவு 12.10 மணிக்கு புறப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரயிலில் பயணித்த பயணிகளுக்கு சாப்பாடு சேராமல் அவர்கள் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: Uttarkashi Tunnel Rescue: 17 நாட்கள் இருட்டில் நடந்தது என்ன? - விவரிக்கும் மீட்கப்பட்ட தொழிலாளி விஸ்வஜீத் குமார்
மேலும் படிக்க: Vijayakanth: ‘விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை; இன்னும் 14 நாட்கள் தேவை’ .. மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)