கட்டுப்பாட்டை இழந்த SUV... பெங்களூருவில் நிகழந்த பயங்கரம்.. 7 உயிர்கள் பறிபோன சோகம்
ஹோஸ்கோட் தாலுகாவில் உள்ள கம்பலிபுரா கேட் அருகே அதிகாலை 4:15 மணி முதல் 4:30 மணி வரை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பெங்களூ வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் ஆறு மாணவர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹோஸ்கோட் தாலுகாவிற்கு உட்பட்ட கம்பலிபுரா கேட் அருகே அதிகாலை 4:15 மணி முதல் 4:30 மணிக்குள் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து எப்படி நடந்தது?
ஹோஸ்கோட்டிலிருந்து தேவனஹள்ளி நோக்கிச் சென்ற எக்ஸ்யூவி 700 (SUV 700) ரக காரை 17 வயது சிறுவன் அயன் ஓட்டிச் சென்றுள்ளார். மணிக்கு 100 கிமீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட அந்தச் சாலையில், சுமார் 150 முதல் 160 கிமீ வேகத்தில் கார் சென்றதே இந்த விபரீதத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
பரிதாபமாக பறிபோன உயிர்கள்:
அதிவேகமாக வந்த அந்த வாகனம் முதலில் ககன் என்ற 26 வயது இளைஞரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது, இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் லாரியின் பின்புறம் உடைந்து, அது சாலையை விட்டு விலகி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் பாலசுப்பிரமணியம் காயங்களுடன் உயிர் தப்பினார்.
உருக்குலைந்த கார்:
விபத்துக்குள்ளான எஸ்யூவி கார் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்த நிலையில், அதில் பயணித்த 16 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களான அஹ்ராம் ஷெரீஃப், அஸ்வின் நாயர், ஈதன் ஜார்ஜ், அயன் அலி, பரத் மற்றும் முகமது ஃபர்ஹான் ஷேக் ஆகிய ஆறு பேரும் உயிரிழந்தனர்.
லாரி மீது மோதிய பிறகு, அந்த கார் சுமார் 150 மீட்டர் தூரம் விபத்துத் தடுப்புச் சுவரைத் தாண்டிச் சென்று நின்றது. இந்த விபத்து நடந்த சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, பெங்களூரு விமான நிலையத்தை நோக்கிச் சென்ற மற்றொரு கார், சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியின் மீது மோதியதில் அதில் இருந்த இருவர் லேசான காயமடைந்தனர். உயிரிழந்த மாணவர்கள் 10-ஆம் வகுப்பு மற்றும் பியூசி (PUC) பயின்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் வேக ரேடார் தரவுகளைக் கொண்டு விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
























