Delimitation: தொகுதி மறுவரையறை.. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் தொகுதிகள்.. எத்தனை தெரியுமா?
நாங்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் கிடையாது. இன்று தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை கூட எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் எத்தனை நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்போகிறது என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கியுள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய அமித்ஷா, “தென்னிந்திய மாநிலங்கள் தொகுதி மறுவரையறை குறித்து ஒரு தவறான கதையைப் பரப்பி வருகிறது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தென் மாநிலங்களில் நன்மை கிடைக்கும் என்பதை நிரூபிக்கும் தரவுகளை நான் தருகிறேன்.
நாங்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் கிடையாது. இன்று தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை கூட எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறது. தொகுதி மறுவரையறையை இட ஒதுக்கீட்டுடன் இணைக்கும் அரசின் இந்த நடவடிக்கை 2029 நாடாளுமன்ற தேர்தல்களில் தங்களுக்கு சாதகமாக மக்களவைத் தொகுதிகளை மாற்றி அமைப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்தி அதனடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது இந்தி பேசும் மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்ற எதிர்க்கட்சிகளின் வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. . ஒவ்வொரு மாநிலத்திற்கும் நாடாளுமன்றத்தில் சம முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்த்திற்கும் கூடுதல் இடங்களை வழங்கும்.
இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 20 இடங்களும், கேரளாவிற்கு 10 இடங்களும், தெலங்கானாவிற்கு 9 இடங்களும், ஆந்திரப் பிரதேசத்திற்கு 13 இடங்களும் கிடைக்கும். நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் அதிகமான இடங்களையும், இரண்டாவது இடம் மகாராஷ்ட்ராவுக்கும் கிடைக்கும் என அமித்ஷா தெரிவித்தார்.
கர்நாடகாவில் 28 இடங்களும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும், ஆந்திராவில் 25 தொகுதிகளும், தெலங்கானாவில் 17 தொகுதிகளும், கேரளாவில் 20 தொகுதிகளும் தற்போது நடைமுறையில் உள்ளது. தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் ஐந்து தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மொத்த மக்களவை இடங்களின் எண்ணிக்கை 129ல் இருந்து 195ஆக உயரும்” என அமித்ஷா கூறியுள்ளார்.
850 என்ற எண்ணிக்கை வருவதாக சொல்லப்படுகிறது. சரியான எண்ணிக்கை 816 ஆக இருக்கும் என நினைக்கிறேன். 543 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் 33 சதவிகித பெண்களுக்கான இட ஒதுக்கீடு, மறு வரையறை செய்து இடங்களை அதிகரிக்கும்போது அது மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடும். இதனால் எந்த பாதகமும் ஏற்படாது” என அமித்ஷா குறிப்பிட்டார்.
பாஜக செல்வாக்கு செலுத்தும் வட மாநிலங்களை விட குறைவான இடங்கள் அதிகரிப்பதால் தென் மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீது நாளை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில் என்ன மாதிரியான முடிவு எட்டப்படப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்



















