காட்டு யானை அருகே செல்பி… கோவையில் உயிரை பணயம் வைத்து ரசித்த பொதுமக்கள்
கோவை தடாகம் பகுதியில் சுற்றி திரிந்த யானையை ஆபத்து என தெரிந்தும் கண்டு ரசித்த பொதுமக்கள்.

கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், கணுவாய், பன்னிமடை, உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் இரைத்தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைகின்றன. மேலும், விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்துவதோடு அப்பகுதியில் உள்ள பொருட்களையும் தாக்கி துவம்சம் செய்து வருகிறது
கடந்த 2 தினங்களக்கு முன் கணுவாய் பகுதியில் டாஸ்மாக் மதுபான கூடத்தை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தி அது தொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் கணுவாய் அடுத்த தடாகம் சாலையில் உள்ள குன்று பெருமாள் கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஒற்றைக் காட்டு யானை சுற்றி திரிந்து அங்குள்ள மரங்களை தின்று கொண்டிருந்துள்ளது.
வீடியோ எடுத்த பொதுமக்கள்
சாலையை ஒட்டியே மலைத்தொடர் இருப்பதாலும் ஒற்றைக் காட்டு யானை அடிவாரத்தில் இருந்ததாலும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி யானையை கண்டு ரசித்தனர். சிலர் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்
அப்பொழுது அப்பகுதியில் வசிக்கும் சில மக்கள் இது போன்று பார்ப்பது ஆபத்தானது என்று கூறி அங்கிருந்து சில வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், யானையை வனத்திற்குள் விரட்டினர். யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க தேவையான நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.























