கோவையில் இந்து முன்னணி நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கு ; இந்து முன்னணி நிர்வாகி உட்பட இருவர் கைது
”விநாயகர் சதுர்த்தியின் போது முன் விரோதம் ஏற்பட்டதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்து முன்னணி நிர்வாகி தமிழ்ச்செல்வன் (24), அவரது நண்பர் ஹரிஹரன் (25) ஆகிய இருவரை கைது செய்துள்ளோம்.”

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காமராஜர் நகர் நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஹரிஷ் (21) பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் மேட்டுப்பாளையத்தில் இந்து இளைஞர் முன்னணி நகர பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன் பக்க கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இது குறித்து தகவலறிந்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கார் கண்ணாடியை உடைத்த நபர்களை கண்டறிந்து, உடனடியாக கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்கள் உடைப்பு சம்பவங்கள் நடந்த நிலையில், காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக எவ்வித சம்பவங்களும் நடைபெறாமல் இருந்த நிலையில், மீண்டும் இந்து அமைப்பு நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”இன்று மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில்
இந்து முன்னணியை சேர்ந்த ஹரீஷ் என்பவரின் கார் தாக்கப்பட்ட வழக்கு சம்மந்தமாக, அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி தமிழ்ச்செல்வன் (24), அவரது நண்பர் ஹரிஹரன் (25) ஆகிய இருவரை கைது செய்துள்ளோம்.

விநாயகர் சதுர்த்தியின் போது முன் விரோதம் ஏற்பட்டதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான காரணம் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுழற்சி முறையில் இரவு பகலாக மாவட்டம் முழுவதும் 1500போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் இரண்டு பிளைவுட் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். அதற்கான விசாரணையை துரிதபடுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பாஜகவை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகள் என மொத்தம் 6 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவியது.தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















