இறக்குமதி வேட்பாளர் வேண்டாம்... கோவையில் எஸ். பி. வேலுமணி பிரச்சாரம்...
எதிர்க்கட்சிகள் வெளியூர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து வாக்கு கேட்பதாகவும் கோவையில் எஸ். பி. வேலுமணி விமர்சனம்.

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை இடையர் வீதி பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
கோவை தெருக்களில் அதிமுக பிரச்சாரம்
பிரச்சாரத்தின் போது பேசிய அவர், கடந்த காலத்தில் இந்த தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தவர் அம்மன் அர்ஜுனன் எனக் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும் விமர்சித்தார். கோவையில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் மேம்பாலங்கள் போன்றவை அதிமுக ஆட்சியிலேயே உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாகவும், தற்போது அவை விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். அம்மன் அர்ஜுனன் பொதுமக்களுடன் நெருக்கமாக இருப்பவர் என்றும், எப்போது வேண்டுமானாலும் மக்களுக்காக வருபவர் என்றும் பாராட்டினார்.
இதேவேளை, எதிர்க்கட்சிகள் வெளியூர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து வாக்கு கேட்பதாகவும் அவர் விமர்சித்தார். மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவதாக கூறி ஏமாற்றப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மின்சார கட்டணம், சொத்து வரி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் குடும்பங்களுக்கு பெரும் பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் கவலை வெளியிட்ட அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறினார். தேர்தலில் உள்ளூர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், அதிமுக ஆட்சியே தமிழகத்திற்கு முன்னேற்றத்தை கொண்டுவரும் என்றும் வலியுறுத்தினார்.























