“சிங்கம் சிங்கிளாக தான் வரும்” – விஜய் பற்றி செங்கோட்டையன் அதிரடி பேச்சு...
கோவையில் தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி மீது கடும் விமர்சனம் செய்தார். “நான் முதல்வராக வேண்டிய நிலையில் இருந்தேன்; சூழ்நிலையால் அது மாறியது” என்றார்.

கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தவெக நிர்வாகி செங்கோட்டையன், அதிமுக மற்றும் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். கோவை தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து சிவானந்தா காலனி பகுதியில் அவர் பேசினார்.
அப்போது, “எங்கள் தலைவர் விஜய் மக்கள் சக்தியுடன் ஆட்சி அமைக்கத் தயாராக உள்ளார். ஊழல் மற்றும் வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும். மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என்றார்.
மேலும், “பலமுறை தோல்வியடைந்த பழனிசாமிக்கு வரும் ஓட்டுகள் நோட்டாவுக்கு சமம். தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவது விஜய்யால் மட்டுமே சாத்தியம்” என்றும் கூறினார்.
செந்தில் பாலாஜி குறித்து விமர்சித்த அவர், “கரூரில் வெற்றி பெற முடியாதவர் கோவையில் வெல்ல முடியாது” என்றார். அதிமுக, திமுக இரண்டும் ஊழல் கட்சிகள் என்றும், அவற்றை எதிர்க்கும் சக்தி தவெக மட்டுமே என்றும் தெரிவித்தார். பாஜக குறித்து பேசும்போது, “அண்ணாமலை மீது அழுத்தம் கொடுத்து கூட்டணி பேசுவது சரியல்ல. பாஜகவினருக்கு சுயமரியாதை இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
தனது அரசியல் அனுபவத்தை குறிப்பிட்டு, “நான் முதல்வராக வேண்டிய நிலையில் இருந்தேன். ஆனால் சூழ்நிலைகள் மாறி பழனிசாமி முதல்வரானார். அப்போது வி.கே. சசிகலா கட்சி ஒற்றுமைக்காக அவரையே தேர்வு செய்யச் சொன்னேன்” என்றார்.
மேலும், வாக்காளர்களிடம் பணம் பெற்றாலும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த தேர்தலில் தவெக வெற்றி பெறும் என்றும், கொங்கு மண்டலம் தனது கட்சியின் கோட்டையாக மாறும் என்றும் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















