![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; வீடியோக்கள் குறித்து விசாரணை எனத் தகவல்
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.
![பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; வீடியோக்கள் குறித்து விசாரணை எனத் தகவல் Pollachi molested case Arrested persons appeared in Coimbatore court - TNN பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; வீடியோக்கள் குறித்து விசாரணை எனத் தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/23/b6469222c1ed0d8cb3e382a5391d828e1708673754801188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் 2019ம் ஆண்டு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். பின்னர் பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால், பாபு, அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்தது. 9 பேர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி, மானபங்கம் செய்தல், பெண்கள் கடத்தல், ஆபாச வீடியோ பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துங்கள் உள்ளிட்ட 10 சட்டப் பிரிவுகளில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. 8 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்காக தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. நீண்ட மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கைது செய்யப்பட்டவர்கள் சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் இன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரையும் காவல் துறையினர் நேரில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள வீடியோக்களை வழக்கறிஞர் முன்னிலையில் ஒளிபரப்பு செய்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து, கோவை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். பின்னர் சேலம் சிறைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருந்த காவல் துறை வாகனம் கோவை சித்ரா விமான நிலையம் அருகே திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, அங்கு காத்திருந்த குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களை சந்தித்து உரையாடினர். முக்கியக் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ் ஆகிய 5 பேர் அந்த வாகனத்தில் இருந்தனர். உறவினர்களிடம் அவர்கள் பேசிய பின்னர், அந்த வாகனம் சேலம் மத்திய சிறையை நோக்கி சென்றது. இந்த காட்சிகளை அங்கிருந்த ஒரு நபர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க வேண்டும் என்றால், முறையாக நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உறவினர்களைப் பார்க்க அனுமதித்தது சேலம் காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சலுகை அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து கைதானவர்களுக்கு சலுகை காட்டிய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் கைதானவர்கள் சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்பரஸ் மூலம் ஆஜர்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)