நீலகிரியில் மீண்டும் கனமழை ; மலை ரயில் சேவை இன்றும் இரத்து!
ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை வலுபெற்று வந்த நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. குறிப்பாக நீலகிரி எல்லை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்ததது. இதனால் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்படுவதும், இதனால் நீலகிரி மலை ரயில் சேவை நிறுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து வந்தது.
கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையும், மீண்டும் 9 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மலை ரயில் பாதையில் சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த நிலையில், 10 நாட்களுக்குப் பின்னர் கடந்த 19ஆம் தேதி முதல் மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 21ம் தேதி இரவு பெய்த திடீர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. அடர்லி, ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மேலும் மண் சரிந்து ரயில் பாதையை மூடியது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதேபோல உதகை - குன்னூர் மலை ரயில் பாதையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நிறைவடையாததாலும், நீலகிரி மாவட்டத்தில் வரும் நாட்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததாலும் குன்னூர் - உதகை இடையேயான மலை ரயில் சேவை வருகின்ற நவம்பர் 30 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டது. இதேபோல மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை வருகின்ற டிசம்பர் 7 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே நேற்றிரவு நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. மேலும் இன்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Before You Go
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்






















