வனத்துறை கூண்டில் சிக்கிய தாய் கரடி ; தேடி அலையும் குட்டிகள்!
இரும்பு கூண்டில் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வைத்து, வனத் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 3 ம் தேதி அதிகாலையில் கரடி கூண்டிற்குள் சிக்கியது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கரடியை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்த நிலையில், அதன் மூன்று குட்டிக் கரடிகள் தாய்க் கரடியை தேடி அலைந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் இரவு நேரங்கள் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் கரடிகள் உலா வருகின்றன. கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதன் காரணமாக, கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன், கேர்கம்பை, இந்திரா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி ஒன்று உலா வந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த கரடி குடியிருப்பு பகுதிகளில் நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து அந்தக் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப் பகுதியில் விட வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து வனத் துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர். இதன் பேரில் மிளித்தேன் கிராமத்தில் கரடியை பிடிக்க இரும்பு கூண்டு வைத்தனர். இரும்பு கூண்டில் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வைத்து, வனத் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 3 ம் தேதி அதிகாலையில் கரடி கூண்டிற்குள் சிக்கியது. கூண்டிற்குள் அடைபட்ட கரடி கூண்டை சேதப்படுத்தி தப்பிக்க முயற்சித்தது. வனத் துறையினர் கூண்டின் மீது கற்கள் மற்றும் கட்டைகளை வைத்து கரடியை கூண்டை விட்டு, வெளியே வராமல் பார்த்துக் கொண்டனர். பின்னர் மாற்று கூண்டு வரவழைக்கப்பட்டு, அந்த கூண்டிற்குள் கரடி அடைக்கப்பட்டது. பின்னர் கோரக்குந்தா வனப் பகுதிக்கு கூண்டை கொண்டு சென்ற வனத் துறையினர் கரடியை கூண்டில் இருந்து விடுவித்தனர். இதையடுத்து கூண்டை விட்டு வெளியேறிய கரடி வனப் பகுதிக்குள் சென்றது.

இந்த நிலையில் மிளித்தேன் கிராமத்தில் மூன்று கரடி குட்டிகள் உலா வருகின்றன. இந்த 3 குட்டி கரடிகளும், பிடிபட்ட தாய் கரடியின் குட்டிகள் என தெரிகிறது. மேலும் தாயைப் பிரிந்துள்ள குட்டிக் கரடிகள், தாய் கரடியை தேடி கிராமப் பகுதிகளுக்குள் உலா வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் கரடிகளை கண்காணித்து வருகின்றனர். மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பது அச்சத்தை அளிப்பதாகவும், தாய்க் கரடியை தேடி அலையும் இந்த குட்டிக் கரடிகளையும் வனத் துறையினர் பிடித்து, தாய் கரடியை விட்ட வனப் பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.





















