![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கனமழையால் மீண்டும் மண் சரிவு - நீலகிரி மலை ரயில் ரத்து; கோத்தகிரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக கல்லாறு, ரண்ணிமேடு, ஹில்குரோவ் ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.
![கனமழையால் மீண்டும் மண் சரிவு - நீலகிரி மலை ரயில் ரத்து; கோத்தகிரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு Nilgiri Hill train canceled due to landslide due to heavy rains in coimbatore கனமழையால் மீண்டும் மண் சரிவு - நீலகிரி மலை ரயில் ரத்து; கோத்தகிரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/66ef774e419bdf9694706b5e4ff398431699504046005188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நவம்பர் மாதம் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வலுவடையும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை வலுவடையும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும் இம்மலை ரயில் பாதையில், மழை காலங்களில் மண் சரிவுகளால் தடைபட்டு வருவது வழக்கம். கடந்த 3 ம் தேதி பெய்த கனமழை காரணமாக கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் தண்டவாள பாதை புதைந்து போனதோடு மரங்களும் சாய்ந்தன. இதனால் கடந்த 4 ம் தேதி காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு சுற்றுலா பயணிகளுடன் புறப்பட வேண்டிய மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணிக்காக தீவிரமாக நடைபெற்றன. இருப்பு பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் மழை காரணமாக சீரமைப்பு பணிகள் தாமதமாகின. இதனால் கடந்த 7 ம் தேதி வரை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான மலை ரயில்கள் சேவை நாளையும் ரத்து செய்யப்படுவதாகவும், மலை ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு பயணக்கட்டணம் முழு தொகையும் திருப்பி வழங்கப்படும் ரயிவே நிர்வாகம் அறிவித்தது. பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் நேற்று நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு கோவை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. குறிப்பாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக கல்லாறு, ரண்ணிமேடு, ஹில்குரோவ் ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நீலகிரி மலை இரயில் சேவை இரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பு பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் சீர் செய்யப்பட்டு மலை ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இதேபோல கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூர், ஊட்டி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. சாலையை சீரமைக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)