![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
என் சொந்த பொண்ணுக்கு நடந்த மாதிரி.. நடவடிக்கை பாயும்.. கோவை விவகாரம் பற்றி அன்பில் மகேஷ் உறுதி
தற்கொலை செய்து கொண்ட 12ஆம் வகுப்பு மாணவி வீட்டிற்க்கு வந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செந்தில் பாலாஜி பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
![என் சொந்த பொண்ணுக்கு நடந்த மாதிரி.. நடவடிக்கை பாயும்.. கோவை விவகாரம் பற்றி அன்பில் மகேஷ் உறுதி Minister Anbil Mahesh said takes impartial action in school student suicide case என் சொந்த பொண்ணுக்கு நடந்த மாதிரி.. நடவடிக்கை பாயும்.. கோவை விவகாரம் பற்றி அன்பில் மகேஷ் உறுதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/14/1caf85735c3b86983cb0a8c485f2d416_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் வீட்டில் மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் மாணவிக்கு உளவியல் ஆலோசணையும் பள்ளி நிர்வாகம் வழங்கியதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அப்பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தேடி வந்தனர். இதனிடையே மீரா ஜாக்சன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டதை அடுத்து, மாணவியின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட 12ஆம் வகுப்பு மாணவி வீட்டிற்க்கு வந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செந்தில் பாலாஜி பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எனது சொந்த பெண்ணுக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் எப்படி இருப்பேனோ அதே நிலை தான் நான் இருக்கிறேன். பெற்றோர் கோரிக்கை என்பது பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த 24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
விழிப்புணர்வு என்பது அனைவருக்கும் தேவை. அனைத்து ஆசிரியர்களுக்கு போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது. பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிக்கு உரியப் பாதுகாப்பை வழங்குவோம். பெற்றோர்கள் பொறுத்தவரை அரசு வேலை வேண்டும் , இன்னொரு குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மாணவியின் கடிதம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)