உயிர் தப்பித்தும் ஆனந்த உறக்கத்தில் டிரைவர் – விபத்துக்குப் பிறகும் போதை குறையவில்லை
பொள்ளாச்சி அருகே கார் விபத்து. மதுபோதையில் ஓட்டிய ஓட்டுநர் சாலையோரத்தில் தூங்கிய சம்பவம் வைரல்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மதுபோதையில் கார் ஓட்டி வந்த ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்தி வைத்து சாலையோரத்தில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, ஆழியார் சாலை மணல்மேடு பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. பின்னர் சாலையின் வலதுபுறம் ஓரமாக நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெரும் உயிர்சேதம் ஏற்படாமல் தப்பியது.
விபத்து நடந்ததும் தரையில் படுத்து தூங்கிய டிரைவர்
விபத்துக்குப் பிறகு காரில் இருந்து வெளியே வந்த ஓட்டுநர், எந்த விபத்தும் நடக்காதது போல சாலையோரத்தில் படுத்து குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலையோரத்தில் கவிழ்ந்து கிடந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். பின்னர் சாலையோரத்தில் போதையிலேயே தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநரை எழுப்பி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில், தேவம்பாடி வலசு பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. அவரின் அலட்சியமான ஓட்டுநர் முறையால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படாமல் தப்பியது நல்வாய்ப்பாக கருதப்படுகிறது. மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.























