‘அதிமுக ஆட்சியில் கூட மரியாதையாக நடத்தினார்கள்’....கோவை மேயருடன் திமுக மண்டலத்தலைவர் வாக்குவாதம்
மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு, தங்களது மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகள் அனைத்தையும் மேயர் கல்பனா உள்நோக்கத்துடன் நிறுத்தி வைப்பதாக குற்றம்சாட்டினார்.

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்ட நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட மறந்தனர். இதனையடுத்து உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. கூட்டம் துவங்கியவுடன் மாநகர பகுதிகளில் நடைபெறும் பணிகள் மந்தகதியில் நடப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். அப்பொழுது அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கும், திமுக மேயர் கல்பனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மிச்சர் சாப்பிடுவதற்காக மாநகர மன்றத்திற்கு வருகிறீர்களா எனக் காட்டமாக அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பினார். 10 ஆண்டுகளாக நீங்கள் மிச்சர் சாப்பிட்டீர்களா என மேயர் கல்பனா பதிலுக்கு பேசினார். இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனைதொடர்ந்து பேசிய திமுக கவுன்சிலரும், மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு, தங்களது மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகள் அனைத்தையும் மேயர் கல்பனா உள்நோக்கத்துடன் நிறுத்தி வைப்பதாக குற்றம்சாட்டினார். அப்பொழுது திமுக மேயர் கல்பனாவிற்கும் திமுக மண்டல தலைவர் மீனா லோகுவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மாநகராட்சி மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ய போவதாகவும், அதிமுக ஆட்சியில் கூட மரியாதையாக நடத்தினார்கள். இப்போது மோசமாக நடத்துகின்றனர் எனவும், தனிபட்ட வன்மத்துடன் மேயர் கல்பனா செயல்படுவதாகவும் கூறிய மீனா லோகு, மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ய போவதாக தெரிவித்து வெளியேற முயன்றார். வெளியேற முயன்ற திமுக கவுன்சிலர் மீனா லோகுவை சக திமுக கவுன்சிலர்கள் அமைதிபடுத்தி உட்கார வைத்ததுடன், மண்டல தலைவரின் கோரிக்கைகளை மேயர் கல்பனா செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கு முன்னதாக இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சி பகுதிகளில் துவக்கப்பட்ட இலவச மாநகராட்சி உடற்பயிற்சி கூடங்களுக்கு தற்பொழுது உள்ள திமுக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய அவர்கள், அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சி பகுதிகளில் இலவச உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டதாகவும், தற்போது தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கின்ற அந்த இலவச உடற்பயிற்சி கூடங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே பல்வேறு விஷயங்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இதற்கும் கட்டணம் நிர்ணயித்துள்ளதாகவும் இளைஞர்களை ஊக்குவிக்கும் அரசு என்று கூறிக்கொள்ளும் திமுகவினர் இவ்வாறு செய்யலாமா என கேள்வி எழுப்பினர். அண்மையில் மேயரின் குடும்பத்தினர் செய்த செயல் மிகவும் அருவருக்கத்தக்க செயல் எனவும், வெட்கக்கேடான செயல் எனவும் இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் எனவும் தெரிவித்தனர். மேலும் மேயருக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோடிக்கணக்கில் செலவு செய்து அரசு குடியிருப்பு ஒதுக்கி இருக்கும் பொழுது ஏன் மேயர் அங்கு குடியிருக்கின்றார் என்று தெரியவில்லை எனவும் மக்கள் வரி பணம் என்றால் எப்படி வேணாலும் வீணாக்கலாமா? என கேள்வி எழுப்பினர். தொடர் வாக்குவாதங்களினால் கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















