கட்டையால் அடித்து கொலை… தம்பதிக்கு ஆயுள் தண்டனை - கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
கட்டையால் அடித்து தொழிலாளி கொலை: தம்பதிக்கு ஆயுள் தண்டனை. கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோவை மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிலாளி கொலை வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு, சமூகத்தில் வன்முறைக்கு எதிரான கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
மரக்கட்டையால் அடித்து கொலை
கோவை அடுத்த அரசூர், மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. தறி ஓட்டும் தொழிலாளியான இவருக்கு மனைவி சித்ரா மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி தாமரை. 2023ஆம் ஆண்டு, ரங்கசாமி தாமரையின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாமரை கூச்சலிட, ரங்கசாமி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை தாமரை தனது கணவர் கோவிந்தராஜிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கோவிந்தராஜ் மற்றும் தாமரை இருவரும் ரங்கசாமியின் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சித்ராவிடம் தெரிவித்துள்ளனர். இதனால் இரு குடும்பங்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ரங்கசாமி வீட்டிற்கு திரும்பியபோது, அவருக்கும் கோவிந்தராஜுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து ரங்கசாமியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் துறை வழக்குப் பதிவு செய்து, கோவிந்தராஜ் மற்றும் தாமரை ஆகிய இருவரையும் கைது செய்தது. இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார், குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி தாமரை ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.























