வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
பேரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
By : பிரகாஷ் | Updated at : 01 Apr 2026 02:32 PM (IST)
நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்
Source : abp nadu
கோவை அருகிலுள்ள பேரூர் பகுதியில் நள்ளிரவில் வீட்டில் புகுந்து திருட முயன்ற மர்ம நபர் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரூர் ஆற்று வீதி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (34) என்பவர் தனது வீட்டில் கடந்த 29-ம் தேதி இரவு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, சுமார் 22 முதல் 25 வயதுக்குள் உள்ள இளைஞர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் படுக்கையறை கதவைத் திறக்க முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த கௌசல்யா சத்தமிட்டார்.
தேடுதல் வேட்டை தொடக்கம்
அவரது கணவர் உடனடியாக அந்த நபரை பிடிக்க முயன்றபோது, மர்ம நபர் வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி தப்பியோடி விட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும் இதே நபர் திருட முயன்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கௌசல்யா பேரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், விசாரணையில் சிலரின் பெயர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ள நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவரை உறுதிப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் காலத்தை முன்னிட்டு, இரவு நேரங்களில் வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Breaking News, Anytime, Anywhere - Download ABPLIVE on Android and iOS now!