கோவை மாவட்ட காவல்துறையினர் அதிரடி – சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 32 ரவுடிகள் கைது!
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கண்டறியப்பட்ட 32 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கியமான மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்கான தீவிர பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட நிர்வாகத்தினர் சார்பாகவும் பல்வேறு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்கும் அமைதியான தேர்தல் சூழலை உறுதி செய்வதற்கும் கோவை மாவட்ட காவல்துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்களின் தலைமையில் மாவட்டம் முழுவதும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பல குற்றவாளிகள் மற்றும் முந்தைய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் மீது சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்ட உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கண்டறியப்பட்ட 32 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 7 வழக்குகள் NDPS சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 22 பேர் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் 10 பழக்கப்பட்ட குற்றவாளிகள் மீது மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110ன் கீழ் பிணை ஏற்கப்பட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் எந்தவிதமான சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிப்பு, தீவிர ரோந்து மற்றும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் அமைதியான, சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலில் பாதுகாப்பான சூழலில் தங்கள் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்களின்றி அதிகப்படியான பணம் அல்லது பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டாம் எனப் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தேர்தல் பிரிவு எச்சரித்துள்ளது.























