வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
எம்.எல்.ஏ சீட்டை விற்காதே’ என கோஷமிட்டு கோவையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்.

கோவையில் காங்கிரஸ் கட்சி அறிவித்த வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை காமராஜர் பவன் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், கட்சி மேலிடத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
புதியவர்களுக்கு சீட் - கோவையில் காங்கிரஸ் குழப்பம்
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் கோவை மாவட்டத்தின் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூரிய பிரகாஷ் மற்றும் சிங்காநல்லூர் தொகுதிக்கு ஸ்ரீநிதி நாயுடு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நீண்டகாலமாக கட்சியில் பணியாற்றி வரும் மூத்த நிர்வாகிகள் இருப்பினும், சமீபத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து இணைந்தவர்களுக்கு முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சிங்காநல்லூர் தொகுதிக்கு ஸ்ரீநிதி நாயுடுவை அறிவித்ததும், இளம் வயதான சூரிய பிரகாஷுக்கு கவுண்டம்பாளையம் தொகுதி வழங்கப்பட்டதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் நிவேதித் ஆல்வா, கிரிஷ் சோடங்கர் மற்றும் மாநில தலைவர் செல்வபெருந்தகை ஆகியோரின் புகைப்படங்களுக்கு பணமாலை அணிவித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “எம்.எல்.ஏ சீட்டை விற்காதே”, “வேட்பாளரை மாற்றிடு” போன்ற கோஷங்களை எழுப்பிய நிர்வாகிகள், உடனடியாக வேட்பாளர்கள் மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருவதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.























