வால்பாறையில் சுற்றித்திரிந்த பெண் புலி சிக்கியது - சிகிச்சை அளிக்கும் பணிகள் தீவிரம்...!
’’வேட்டையாடும்போது மற்ற விலங்குகளுடன் சண்டை போட்டதால் புலிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது’’

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உடல் நலக்குறைவுடன் சுற்றித் திரிந்த புலியினை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த பகுதி அதிகளவிலான தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. காடுகள் சுருக்கம், உணவு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும், இதன் காரணமாக மனித வன விலங்கு மோதல்கள் நடப்பதும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள முடிஸ் பகுதியில் நேற்று பட்டப் பகலில் புலி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து மானாம்பள்ளி வனத் துறையினருக்கு அனுப்பினர். இதனை தொடர்ந்து புலியை தேடும் பணியில் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக ஊழியர்கள் ஈடுபட்டனர். தேயிலை தோட்டங்கள், முட்புதர்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் புலி பதுங்கி இருக்கிறதா எனத் தேடினர். இந்நிலையில் மாலை சுமார் 6 மணியளவில் முடிஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு முட்புதருக்குள் புலி பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் தேயிலை தோட்டத்திற்குள் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ஒரு புதருக்குள் புலி பதுங்கியிருப்பதை வனத்துறையினர் பார்த்தனர். இதையடுத்து புலியை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புதருக்குள் பதுங்கி இருந்த புலியை வேட்டைத் தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த படி சென்று, வலை வீசி புலியை பிடித்தனர். இதையடுத்து வனத்துறையினர் பிடிபட்ட புலியை கூண்டிற்குள் அடைத்தனர்.
வனத்துறையினரிடம் பிடிபட்ட புலி சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் புலி என்பதும், உடல்நலக் குறைபாடுடன் சுற்றி வந்ததும் தெரியவந்தது. வேட்டையாடும் பொழுது மற்ற வன விலங்குகள் உடன் சண்டை போட்டதால், உடலில் காயம் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் உள்ளதாக வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கூண்டிற்குள் அடைக்கப்பட்ட புலி ரொட்டிக் கடை பகுதியில் உள்ள மனித விலங்கு மோதல் மற்றும் தடுப்பு மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு புலிக்கு வனத் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் புலியின் உடல் நிலையை தொடர்ந்து வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். புலியின் உடல் நிலை தேறுவதை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்






















