Covid 19 Positive | கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா ; பள்ளியை மூட சுகாதாரத்துறை உத்தரவு..!
School Students Test Positive for Covid 19: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன் தினம் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் கடந்த ஒரு மாத காலமாக தினசரி கொரோனா(Coronavirus) பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன் தினம் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த இந்த 3 மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுகாதாரத் துறையினர் உடனடியாக தகவல் அளித்தனர். இதையடுத்து 3 மாணவர்களுக்கு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த இரண்டு மாணவர்களின் பெற்றோர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும், இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, இன்று சுல்தான்பேட்டை உயர்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பள்ளியை மூட சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் தூய்மை செய்யப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நாமக்கல், அரியலூர், தஞ்சை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், கோவை மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
ட்ரெண்டிங் செய்திகள்






















