”அரசு விடுதிகளில் இப்படித்தான் உணவு கிடைக்கும்” – அதிகாரி பதிலால் கோவையில் மாணவிகள் வேதனை...
கோவை ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி மற்றும் புழுக்கள் இருந்ததாக மாணவிகள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவு வழங்கப்பட்டதாக மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 13 மாணவிகள் விடுதிகளும், 13 மாணவர்கள் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட இந்த விடுதிகளுக்கு வெள்ளலூரில் செயல்படும் ஒருங்கிணைந்த சமையல் மையத்தில் இருந்து உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி மற்றும் புழுக்கள் இருந்ததாக மாணவிகள் குற்றம்சாட்டினர். இதனால் அதிருப்தியடைந்த மாணவிகள், கோவை துணை ஆட்சியருக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த புகாரின் பேரில், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள் கூறுகையில், “கடந்த பத்து மாதங்களாக தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருகிறது. பலமுறை விடுதி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தான் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பினோம்” என்றனர்.
மேலும், “புகார் தொடர்பாக தொடர்பு கொண்ட அதிகாரி ஒருவர், அரசு விடுதிகளில் இப்படித்தான் உணவு வழங்கப்படும் என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தார்” என்றும் மாணவிகள் குற்றம்சாட்டினர்.
தற்போது மாணவிகளின் கருத்துகளை அதிகாரிகள் பதிவு செய்து, உணவு வழங்கும் முறை மற்றும் சுகாதார நிலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















